பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தொடர்ந்தும் வகிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு அரசாங்கம் தன்னால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்று இலங்கை தேசிய சமாதான பேரவை வலியுறுத்திக் கேட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பில் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா விடுத்திருக்கும் அறிக்கையொன்றில் கூறியிருப்பதாவது,
அண்மைய அரசியல் நெருக்கடியின் பின்புலத்தில் நோக்கும்போது பாராளுமன்றத்தைக் கலைத்ததில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அரசியலமைப்பை மீறிச்செயற்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த அதேவேளை, இரா.சம்பந்தனின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் நெருக்கடியில் சம்பந்தப்பட்ட எந்தவொரு தரப்புடனும் பேரம் பேசாமல் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்வதற்கு கோட்பாட்டின் அடிப்படையில் அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தது.
ஆனால், அரசியல் நெருக்கடியின் முடிவில் கூட்டமைப்பு அரசியல் ரீதியில் சிக்கலான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.அதாவது, அரசியல் நெருக்கடியின்போது தாங்கள் கடைப்பிடித்த அணுகுமுறைகளினால் தமிழ் மக்கள் பெற்றிருக்கக்கூடிய பயன் என்று எதையும் தங்கள் வாக்காளர்களுக்கு காண்பிக்க இயலாதவர்களாக கூட்டமைப்பின் தலைவர்கள் இருக்கிறார்கள். அவ்வாறு பயன் எதையும் காட்டமுடியாமல் போகுமேயானால் தீவிர தமிழ் தேசியவாத கட்சிகளின் பிரசாரங்களின் விளைவாக கூட்டமைப்பின் அரசியல் பலம் அருகிப்போய்விடக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு நாட்டுக்குள்ளும் வெளியேயும் ஒரு உத்தியோகபூர்வ மதிப்பு அந்தஸ்தை வழங்கியது. கூட்டமைப்பின் தலைவர் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களின் வரிசையில் ஒருவராகவும் விளங்கக்கூடியதாக இருந்தது. இது கூட்டமைப்புக்கோ அல்லது அதற்கு வாக்களித்த தமிழ்ச் சமூகத்துக்கோ வெறுமனே ஒரு அடையாளபூர்வமான கௌரவம் அல்ல.எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு முக்கியமாக இருந்ததற்கு மிகுந்த நடைமுறைக் காரணங்களும் உள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பிலான சர்ச்சையில் கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடுவதற்கான நடவடிக்கைகளுக்குத் தயாராவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.சுய நலன்களின் அடிப்படையில் செயற்படுகின்ற அரசியல் தலைமைத்துவங்களைப் போலன்றி , நீதிமன்றங்கள் தர்க்கநியாயத்துடன் பிரச்சினைகளை அணுகக்கூடிய ஆற்றலைக்கொண்டுள்ளன என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் முன்னிலையில் கூட்டமைப்பினால் இரு முகக்கிய வாதங்களை முன்வைக்கமுடியும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி சிறிசேன அரசாங்கத்தின் அங்கமாக இருக்கிறார்.அதனால் அவரின் முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவராக தர்க்க நியாயத்துக்குப் பொருந்தாது. ஜனாதிபதி மூன்று அமைச்சுப் பொறுப்புக்களையும் தன்வசம் வைத்திருக்கிறார். இரண்டாவதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு அங்கமாக இல்லாத ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்கமுடியாது. இத்தகையதொரு சூழ்நிலையிலே, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்கு கூட்டமைப்பு முன்னெடுக்கக்கூடிய முயற்சிகளை ஆதரிக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது.


