பொன் மாணிக்கவேலுக்கு எதிராக 3-வது முறையாக டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்க வந்த போலீசார்!

436 0

சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் 3-வது முறையாக புகார் அளிக்க வந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் போலீசார் டி.ஜி.பி.யிடம் ஏற்கனவே 2 முறை புகார் அளித்துள்ளனர்.

மேலும் பொன் மாணிக்கவேல் பொய் வழக்கு போட சொல்வதாக கூறி சிலை கடத்தல் தடுப்பு போலீசார் சிலர் தங்களுக்கு இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று 3-வது முறையாக பொன் மாணிக்கவேலுக்கு எதிராக ஏ.டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் அதிகாரிகள் 23 பேர் சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும், பொய் வழக்கு போட வலியுறுத்தும் பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்க டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வந்தனர்.

அப்போது அவர்களுடன் சிலை கடத்தல் வழக்கில் கைதான சக்திவேல், கே.தீனதயாளன் ஆகியோரும் வந்தனர். சிலை கடத்தல் குற்றவாளிகளுடன் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் பொன் மாணிக்கவேல் மீது புகார் அளிக்க வந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிலை கடத்தலில் கைதான 2 பேரும் ‘தாங்கள் முறைகேடாக இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டதாகவும், அதுபற்றி புகார் அளிக்கவே போலீசாருடன் வந்துள்ளோம்’ என்றனர். 

Leave a comment