19 ஆம் திகதி தீர்வு கிட்டும் – பகிஷ்கரிப்பை கைவிட்டு தொழிலுக்கு செல்ல வேண்டுகோள்!

249 0

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி கடந்த 8 தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த பணி பகிஷ்கரிப்பு நேற்று (11) நள்ளிரவோடு கைவிடப்பட்டுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதனால் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் போராட்டதை கைவிட்டுள்ள நிலையில், மீண்டும் தொழிலுக்கு செல்லுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் இடம்பெற இருக்கின்ற கலந்துரையாடலின் போது நல்லதொரு தீர்வினை ஜனாதிபதி பெற்றுக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக ஆறுமுகன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

எனவே, தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி முன்னெடுக்பட்டு வந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய தொழிற்சங்கங்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், வெளிநாட்டில் வாழுகின்ற எமது தமிழ் உறவுகள் மற்றும் எமது தொழிலாளர்கள் அனைவருக்கும் தமது நன்றியினை பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Leave a comment