அமெரிக்க ராணுவ மந்திரியுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை

303 0

அமெரிக்க ராணுவ மந்திரியுடன் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பென்டகனில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை துரிதப்படுத்த முடிவு செய்யப்பட்டது. 

மத்திய பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவுக்கு 5 நாள் பயணம் சென்றுள்ள இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு மந்திரி இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் அவர் வாஷிங்டனில் உள்ள தலைமையகத்தில் உள்ள புத்தகத்தில் சமீபத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி சீனியர் ஜார்ஜ்புஷ்சுக்கு இரங்கல் குறிப்பு எழுதினார். பின்னர் ஆர்லிங்டனில் உள்ள தேசிய கல்லறையில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பென்டகனில் அவர் அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிசுடன் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கலிபோர்னியாவில் உள்ள ராணுவ கண்டுபிடிப்புகளுக்கான தொழிற்சாலையையும், ஹவாயில் உள்ள இந்தோ-பசிபிக் கமாண்ட் தலைமையகத்தையும் பார்வையிட்டார்.

இரு தலைவர்கள் பேச்சுவார்த்தையின்போது அமெரிக்க மந்திரி மேட்டிஸ், “அமெரிக்க-இந்திய ராணுவ உறவு உடையக்கூடிய அல்லது வெற்று வார்த்தைகளால் வரையறுக்கப்பட்டதல்ல. ஆனால் தியாகங்களை மதிப்பது, அமைதிக்கான நடவடிக்கை, நட்புறவு மற்றும் சுதந்திரம் ஆகியவைகளில் மனி தாபிமான அடிப்படையில் இருநாட்டு அங்கீகாரத்துடன் மூழ்கிய நட்புறவால் வரையறுக்கப்பட்டது.

இன்றைய பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கு இடையேயான இணக்கமான தகவல்கள் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செப்டம்பர் மாதத்தில் இருந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கையில் நாங்கள் இணைந்து பணியாற்றி உள்ளோம். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்தாகி உள்ளதால் அமெரிக்காவின் நவீன போர் தளவாடங்களை இந்தியா பெறும்.

இவ்வாறு மேட்டிஸ் கூறினார்.

மேட்டிஸ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, “ரஷியாவிடம் இருந்து இந்தியா எஸ்-400 ரக ஏவுகணைகள் வாங்குவதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் வருங்காலத்தில் நாங்கள் பேசி தீர்ப்போம்” என்றார்.

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

இதற்கு முன்பு டெல்லி, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகள் உண்மையிலேயே நேர்மறையானது, பாதுகாப்பானது. இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கை, ராணுவ கூட்டு நடவடிக்கையில் உறுதித்தன்மை ஆகியவை வளர்ந்துவருகிறது. பல வருடங்களாக இந்திய- அமெரிக்க ராணுவ உறவில் ஒரு வலிமையான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை ஒரு முக்கிய ராணுவ பங்குதாரராக இந்தியா பார்க்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயும் நல்ல ராணுவ ஒத்துழைப்பு, பாதுகாப்பு ஆலோசனைகள், அறிவியல் இணக்கம், கூட்டு உற்பத்தி, கூட்டு வளர்ச்சி உள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான உறவு தொடர்ந்து மிகவும் வலிமை பெற்று வருகிறது.இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Leave a comment