பொய்யான தகவல்களை நம்பி படகுமூலம் அவுஸ்திரேலியா செல்லவேண்டாம்- தூதுவர் எச்சரிக்கை

213 0

சமூக ஊடகங்கள் மூலமாகவும் ஆள்கடத்தல்காரர்களும்  பரப்புகின்ற பொய்யான செய்திகளை நம்பி அவுஸ்திரேலியாவை நோக்கிய சட்டவிரோத கடற்பயணங்களை இலங்கையர்கள் மேற்கொள்ளவேண்டாம் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்செசன் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய எல்லைகள் சட்டவிரோத குடியேற்றவாசிகளிற்கு மூடப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

ஆள்கடத்தல்காரர்களிடமிருந்து அவுஸ்திரேலிய எல்லைகளை பாதுகாத்த- கடலில் மக்கள் நீரில் மூழ்கி மரணிப்பதை தடுத்த கடுமையான எல்லை பாதுகாப்பு கொள்கைகள் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்குள் எந்த சட்டவிரோத குடியேற்ற முயற்சிகளும் இடம்பெறுவதை தடுப்பதற்காக- சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படகுகளை கண்டுபிடிப்பதற்கான வலுவான திறனை அவுஸ்திரேலிய கொண்டுள்ளது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

 

அவுஸ்திரேலியாவிற்குள் படகுகள் மூலம் சட்டவிரோதமாக நுழைவதற்கு நீங்கள் முயற்சி செய்தால் நீங்கள் கைதுசெய்யப்படுவீர்கள் என தூதுவர் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு வருட காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்த அனைத்து இலங்கை  படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன அதிலிருந்தவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்டுள்ளனர் என தூதுவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment