கஜா’ புயல் பாதித்த பகுதிகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிடுகிறார்!

247 0

கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது, மின் இணைப்பை சீர் செய்வது போன்ற நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட இருக்கிறார்.

வங்க கடலில் உருவாகி தமிழகத்தை மிரட்டிக் கொண்டிருந்த ‘கஜா’ புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்தது.

புயலால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு ஏற்கனவே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருந்தது. என்றாலும் இயற்கை சீற்றத்துக்கு முன்பு மனித சக்தியால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை கஜா புயல் நிரூபித்துவிட்டு சென்று இருக்கிறது.

இந்த புயல் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களை புரட்டிப் போட்டுவிட்டது. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

புயல் கரையை கடந்த போது கனமழை கொட்டியது. மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று அடித்த புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1¼ லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், சுமார் 600 டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்தன. சில துணை மின்நிலையங்களும் சேதம் அடைந்து உள்ளன. மேலும் சுமார் 16 ஆயிரம் குடிசைகள் மற்றும் வீடுகள் இடிந்தன.

நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் நாசமானதாலும், கால்நடைகள் உயிர் இழந்ததாலும் விவசாயிகள் நிலைகுலைந்து போய் உள்ளனர்.

பல இடங்களில் செல்போன் கோபுரங்கள் சாய்ந்ததால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாலும், சாலைகளில் மரங்கள் விழுந்ததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. உணவு, குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். நாகை மாவட்டத்தில் தண்ணீர் சூழ்ந்த சில கிராமங்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனி தீவு போல் காட்சி அளிக்கின்றன.

புயல்-மழைக்கு 40-க்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்களில் கணிசமான பேர் வீடு திரும்பிவிட்டனர். ஆனால் நிறைய பேர் இன்னும் முகாம்களிலேயே இருக்கிறார்கள்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் சாய்ந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்றி வருகிறார்கள். பெரிய மரங்களை அகற்ற பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மின்சார வாரிய ஊழியர்கள் சாய்ந்து கிடக்கும் மின்சார கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை அகற்றி, சேதம் அடைந்த துணை மின்நிலையங்களை சரி செய்யும் பணியை தீவிரமாக செய்து வருகிறார்கள். இதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை முழுவதுமாக அப்புறப்படுத்திவிட்டால் போக்குவரத்து சீராகிவிடும் என்றும், மின்இணைப்பு கொடுத்து விட்டால் மின்சார வினியோகம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்றும் கருதி ஊழியர்கள் மும்முரமாக வேலை செய்து வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் நேற்று மின்சார வினியோகம் சீரடைந்தது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் நிர்மல் ராஜூடன் நிவாரண பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முகாமிட்டு நிவாரண பணிகளை முடுக்கிவிட்டு உள்ளனர்.

அமைச்சர் காமராஜ் திருவாரூர் மாவட்டத்திலும், ஓ.எஸ்.மணியன் நாகை மாவட்டத்திலும், அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டத்திலும் முகாமிட்டு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அமைச்சர் ஜெயக்குமார் நாகை மாவட்டம் பொறையாறு பகுதியில் புயல் பாதித்த இடங்களை நேற்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, துரைக் கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் நேற்று தஞ்சையில் நிவாரண பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

புயலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பார்வையிட இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அந்த மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொண்டு இருக்கும் மூத்த அமைச்சர்களான தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சேலத்தில் இருக்கும் முதல்- அமைச்சரை நேற்று தொடர்பு கொண்டு, புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், எனவே 2 நாட்கள் கழித்து வந்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்தனர். மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களும் அதற்குள் வீடு திரும்பி விடுவார்கள், சாலைகளும் சீரமைக்கப்பட்டுவிடும் என்றும் கூறினார்கள்.

எப்போது செல்வார்?

அவர்கள் தெரிவித்த யோசனையை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து இன்று இரவு சென்னை திரும்புகிறார். நாளை (திங்கட் கிழமை) காலை சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில், ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு புயல் பாதிப்பு குறித்த உத்தேச மதிப்பை அளிக்கின்றனர். அதன் அடிப்படையில், நிதி உதவி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுத திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட செல்வார். அவர் எப்போது செல்வார்? என்பது நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகே தெரியவரும்.

Leave a comment