இலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை

2778 0

2015 இல் வெற்றி பெற்ற சிறந்த இலங்கைக்கான மக்களின் வேண்டுகோளிற்கு துரோகமிழைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த  சிலர் முயல்வதை கவலையுடன் அவதானித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஒழுக்கமான நேர்மையான வளமிக்க இலங்கைக்கான போராட்டத்திற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏனைய கட்சிகள், சிவில் சமூகத்துடன் இணைந்து முன்னொருபோதும் இல்லாத  பாரிய இயக்கத்தை கட்டியெழுப்பியது என அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் கட்சியின் சிலர் எங்கள் கொள்கைளை அழிக்க  முயல்வதும் எங்கள் அடிப்படை உரிமையை, ஜனநாயகத்தை பறித்த,  ஜனநாயக ஸ்தாபனங்களை அழித்து ஊழல் இலஞ்ச வலையமைப்பை உருவாக்கிய கட்சியுடன் அரசியல் குழுவுடன் இணைய முயல்வதும் கவலையை அளிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் கடந்த சில வாரங்களாக இடம்பெறுகின்ற காட்சிகள் அனைத்து இலங்கையர்களாலும் மிக நீண்ட காலமாக மிகப்பெறுமதி வாய்ந்தவையாக  கருதப்பட்ட பாதுகாக்கப்பட்ட ஜனநாயக  அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையை அழித்து வருகின்றன எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மிகவும் பெறுமதியான விடயங்களாக கருதும்  இலங்கையர்களும் அதனை நிலைநாட்டும் அமைப்புகளும் இந்த நாட்டில் சுதந்திரத்திற்காகவும் நல்லாட்சிக்காவும் எழுச்சி பெற வேண்டிய முன்னெப்போதும் இல்லாத தருணம் தற்போது வந்துள்ளதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை முன்னொருபோதும் இல்லாத ஆபத்தான குழப்பம் அஜாரகம்  ஆகியவற்றை நோக்கிய அதளபாதளத்திற்கு சென்றுக்கொண்டிருக்கின்றது எனவும் சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.அனைத்து இலங்கையர்களும் இதிலிருந்து நாட்டை மீட்பதற்கு ஒன்றிணையவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a comment