அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மழுங்கடிப்பு

254 0

அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தோட்டத் தொழிலாளர்களின்  சம்பள உயர்வு  நடவடிக்கைகள் மழுங்கடிப்பு நிலைக்கு உள்ளாகி  இருக்கின்றன.

இந்நிலையில்  தொழிலாளர்களின் பொருளாதார  நெருக்கடியினை  கருத்தில்  கொண்டு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள்  உடனடியாக  சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்க   முன்வர வேண்டும் என்று  முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும், இலங்கை தொழிலாளர்  ஐக்கிய   முன்னணியின்  பொதுச் செயலாளருமான  எஸ்.சதாசிவம்   தெரிவித்தார்.

இது தொடர்பில்  அவர்  மேலும் கருத்து  தெரிவிக்கையில்,

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை  நிலைமைகள்  மிகவும் மோசமடைந்து  வருகின்றன. இம்மக்களின்  பொருளாதார நெருக்கடி  நிலையானது நாளுக்கு  நாள் வேகமாக  அதிகரித்து வருகின்றது.  எனவே   இவர்களின்  பொருளாதார  நெருக்கடிக்கு  தோள் கொடுத்து   இம்மக்களின்  அபிவிருத்திக்கு வலுசேர்க்க   வேண்டிய ஒரு  தேவை  காணப்படுகின்றது.

தோட்டத் தொழிலாளர் சம்பள  உயர்வு பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தோல்வியைத் தழுவி   இருக்கின்றன.  ஆயிரம்  ரூபா  அடிப்படை  சம்பளத்தினை பெற்றுக் கொடுக்கும்  நோக்கில் அழுத்தங்கள் வழங்கப்பட்டு வருகின்றபோதும்  இதற்கான   சாதகவிளைவுகள் குறைவாகவே உள்ளன.  தோட்டத்  தொழிலாளர் சம்பள  விடயம்   இழுத்தடிப்பு நடவடிக்கைகளுக்கே  தொடர்ந்தும்  உள்ளாகி வருகின்றது.  கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும்  தொழிற்சங்கங்களின்  கையாலாகாத தன்மை இப்போது  வெளிப்பட்டிருப்பதனையே  அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

நாட்டில்  தற்போது   அரசியல் நெருக்கடி  மேலோங்கி காணப்படுகின்றது.  முன்னாள் ஜனாதிபதி   மஹிந்த ராஜபக் ஷ  பிரதமராக  நியமிக்கப்பட்டதைத்  தொடர்ந்து   அரசியல்  நெருக்கடிகள்   சூடு பிடித்திருக்கின்றன.

இந்நிலையில்   கூட்டு   ஒப்பந்த  பேச்சுவார்த்தைகள்   மற்றும்  நடவடிக்கைகள்  மழுங்கடிப்பு   நிலையினை   அடைந்திருக்கின்றன. இதனால்  தொழிலாளர்கள் மிகுந்த  பாதிப்பு   நிலைக்கு   உள்ளாகி  இருக்கின்றனர்.  ஒருவேளை   உணவைக்   கூட திருப்தியாக   உண்ண முடியாத நிலைக்கு   அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே  அரசியல் நெருக்கடிகளுக்கும் மத்தியில்   கூட்டு   ஒப்பந்த   பேச்சுவார்த்தையினை  துரிதப்படுத்த வேண்டிய  ஒரு  சூழ்நிலை மேலோங்கி   காணப்படுகின்றது.  அதேவேளை   கூட்டு ஒப்பந்த தாமத நிலையை   கருத்தில்  கொண்டு தொழிலாளர்களுக்கான நிலுவைப் பணத்தையும்  உரியவாறு பெற்றுக்கொடுக்க   வேண்டும். என்றார்.

Leave a comment