ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு எதிரான வழக்கை மூவர் அடங்கிய விஷேட நீதிமன்றத்தினால் விசாரிக்க முடியாது என தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விஷேட நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விஷேட நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
இதற்கமைய குறித்த வழக்கை தொடர்ந்தும் விசாரிக்க தீர்மானித்துள்ளதுடன், குறித்த வழக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி வரையான காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகள் குற்றமிழைத்துள்ளதாக சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.