கஜா புயல் தீவிரம் அடைந்தது – 13 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

349 0

கஜா புயல் தீவிரம் அடைந்து உள்ளதால் 13 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது நேற்று காலை வலுப்பெற்று புயலாக மாறியது. இதற்கு கஜா (யானை) என பெயரிடப்பட்டுள்ளது.

அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் வட தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை 8.15 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு வடகிழக்கு திசையில் 740 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு கிழக்கு வடகிழக்கில் 840 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இந்த புயலானது மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும் தென் மேற்கு திசையில் வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து இன்று மதியம் தீவிர புயலாக உருவெடுத்தது.

இதனால் தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் கடுமையான கடல் கொந்தளிப்பு நிலவுகிறது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் கடல் காற்று விசுகிறது. 12 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பி ஆக்ரோ‌ஷமாக காணப்படுகிறது.

எனவே இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இன்றே கரைக்கு திரும்பு மாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கஜா புயல் முதலில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி செல்லும் என்றும் கடலூருக்கும் ஸ்ரீஹரி கோட்டாவுக்கும் இடையே 15-ந்தேதி கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது காற்று வீசும் திசையை வைத்து கணிக்கும்போது தெற்கு திசையில் வடதமிழகத்தை தாக்கும் என்று தெரிய வந்துள்ளது.

 

15-ந்தேதி அதிகாலையில் இருந்து புயல் கரையை நெருங்கத் தொடங்கும். பகல் 12 மணி அளவில் புதுவைக்கும் நாகைக்கும் இடையே கரையை கடக்கும். தொடர்ந்து தமிழகத்தின் உள்மாவட்டங்கள் வழியாக வலு இழந்த புயலாகவே செல்லும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும் பரவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

புயல் நெருங்கும் போது 14-ந்தேதி இரவு முதல் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யத் தொடங்கும். ஒருசில இடங்களில் கன மழை பெய்யும்.

15-ந்தேதி அதிகாலை முதல் கன மழை மற்றும் மிக கன மழை பெய்யும். மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலமான காற்றும் வீசக்கூடும். காற்று மழையுடன் கொட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது தீவிர புயலாக மாறிய ‘கஜா புயல்’ மேலும் தீவிரம் அடைந்து அதி தீவிர புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. புயல் கரையை நெருங்க நெருங்கத்தான் அதன் வேகத்தை கணிக்க முடியும் என்றும் இப்போதைக்கு புயல் தாக்கும் அபாயம் நீடிப்பதாகவே வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வலு இழந்த புயலாக உள் மாவட்டங்கள் வழியாகவும், தென் மாவட்டங்கள் வழியாகவும் அரபிக் கடலுக்கு செல்லும் எனவே 15-ந்தேதி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

15-ந்தேதி காலை 8.30 மணி முதல் 16-ந்தேதி காலை 8.30 மணி முடிய வட தமிழகத்தில் மித மிஞ்சிய வகையில் மழை பெய்யும் என்று வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இதே போல் தென் மாவட்டங்களுக்கும் பலத்த மற்றும் மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மித மிஞ்சிய மழை என்பது சில இடங்களில் குறைந்த நேரத்தில் 20 செ.மீ. மழை கொட்டும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment