புதிய தலைமை செயலக வழக்கில் போலீஸ் விசாரணைக்கு தடை நீட்டிப்பு – ஐகோர்ட்

252 0

புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை ஐகோர்ட் மேலும் நீட்டித்துள்ளது. 

தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டப்பட்டது.

இதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் கடந்த மாதம் விசாரித்தனர்.

நீதிபதிகள், ‘புதிய தலைமை செயலகம் கட்டிடம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ரகுபதி தலைமையிலான விசாரணை ஆணையத்தின், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த முடியாது’ என்று கருத்து தெரிவித்தனர்.

 

பின்னர் போலீஸ் விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மணிக் குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடையை வருகிற 22-ந்தேதி வரை நீட்டித்து உத்தர விட்டனர்.

Leave a comment