குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க டிரம்ப், இந்தியா வராதது ஏன்?

270 0

குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக டிரம்ப் பங்கேற்காதது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை இந்திய குடியரசு தின விழாவில் (ஜனவரி 26-ந் தேதி) தலைமை விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இது தொடர்பாக முறையான அழைப்பு வந்துள்ளதாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தார்.

ஆனால் டிரம்ப், இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கப்போவதில்லை என தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், “மோடியின் அழைப்பின் மீது டிரம்ப் எடுத்துள்ள முடிவு என்ன?” என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரிடம் செய்தி நிறுவனம் கேள்வி எழுப்பியது. அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர், “இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்வதற்கு தம்மை பிரதமர் மோடி அழைத்ததை ஜனாதிபதி டிரம்ப் கவுரவமாக கருதுகிறார். ஆனால், ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளதால், இந்திய குடியரசு தின விழாவில் அவர் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது” என கூறி உள்ளார்.

“அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், இந்திய பிரதமர் மோடியும் தனிப்பட்ட முறையில் வலுவான நல்லுறவு கொண்டு உள்ளனர். அமெரிக்கா, இந்தியா இடையேயான உறவை வலுப்படுத்துவதில் டிரம்ப் உறுதி கொண்டுள்ளார்” எனவும் அவர் தெரிவித்தார்.

இந்திய குடியரசு தின விழா நேரத்தில், அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு பேச இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a comment