தீபாவளி அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிகோரி தமிழக அரசு மனு

451 0

தீபாவளி அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது. 

தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாச கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும், எனவே டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி 3 சிறுவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது.

தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி வழங்கி அப்போது நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்

இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழக அரசின் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு வக்கீல் பா.வினோத் கன்னா தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 23-ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் அனைத்து பண்டிகைகளின் போதும் இரவு 8 மணியில் இருந்து 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்தியா பல்வேறு கலாசாரங்கள் அடங்கிய கூட்டாட்சியின் அடிப்படையில் இயங்கும் நாடு ஆகும். ஒவ்வொரு மாநிலமு ஒவ்வொரு பகுதி மக்களும் தங்களுக்கான பாரம்பரியம், கலாசாரம், நம்பிக்கை ஆகியவற்றை கொண்டு விளங்குகிறார்கள்.

வடமாநிலங்களில் தீபாவளி இரவில் கொண்டாடப்படுகிறது. ராமர் போரில் ராவணனை கொன்றதை கொண்டாடும் வகையில் அங்கு கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் வகையில் விடியற்காலையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்று மக்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்த தீபாவளி கொண்டாடுவது வழக்கமாகும். காலையில் தொடங்கும் இந்த கொண்டாட்டம் நாள் முழுவதும் தொடரும். மேலும் தமிழ்நாட்டில் தீபாவளி அமாவாசையன்று சதுர்த்ததி திதியில் கொண்டாடப்படுகிறது. அந்த திதி தீபாவளி அன்று காலை 4 மணிக்கு வருகிறது.

வட மாநிலங்களில் தீபாவளியன்று இரவு தீபம் ஏற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் தீபாவளி அன்று தீபம் ஏற்றாமல் கார்த்திகை பண்டிகையன்று தீபங்கள் ஏற்றப்படுகின்றன. எனவே வடக்கிலும், தெற்கிலும் கொண்டாடப்படும் தீபாவளி கொண்டாட்டங்களில் அதிக வேறுபாடு உள்ளது.

மேலும் கோர்ட்டு உத்தரவின்படி குறைந்த அளவு நேரமான 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஒரே நேரத்தில் அனைவரும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெருமளவில் மாசுக்கேடு விளைவிக்கும்.

எனவே, தீபாவளியின் போது தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள் அன்று அதிகாலை காலை 4.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாட அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் பா.வினோத் கன்னா, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜராகி தமிழ்நாட்டுக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான திருத்தம் கோரும் மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை (இன்று) இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள மனுவில்; “இந்த ஆண்டுக்கான பட்டாசுகளை ஏற்கனவே தயாரித்து முடித்தாகி விட்டது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நேரக்கட்டுப்பாட்டினால் நிறைய பட்டாசுகள் விற்பனையாகாமல் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள நேரக்கட்டுப்பாட்டை இந்த ஆண்டுக்கு விலக்கிக் கொள்ள வேண்டும். மேலும் இத்தீர்ப்பில் பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே விதிமுறைகள் எதுவும் கூறப்படவில்லை. எனவே பசுமை பட்டாசு என்பதற் கான விளக்கம் தேவைப்படுகிறது” என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுவும் தமிழக அரசின் மனுவுடன் சேர்த்து இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

Leave a comment