ஜனாதிபதி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கலந்துரையாடல்!

259 0

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும் அந்த எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவினால் இதன்போது முன்வைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க அதனை ஆமோதித்ததுடன், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அழுத்கமகே, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், ஈ.பி.டி.பி கட்சி தலைவர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியதுடன், அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தமது ஒத்துழைப்பினை பெற்றுத் தருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave a comment