முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி 22ம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, பிரதான நீதவான் ரங்க திசாநயக்க இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்சம் மற்று ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கை தாக்கல் செய்வதற்கு ஆணையாளர்களின் எழுத்து மூல அனுமதி சமர்பிக்கப்படாமையால் அடிப்படை எதிர்ப்பு தெரிவிப்பதாக பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தனர்.
அதன்படி வழக்கை எதிர்வரும் ஜனவரி 22ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் அடிப்படை எதிர்ப்பு சம்பந்தமாக ஆராய்ந்து பார்ப்பதாக உத்தரவிட்டது.
கடந்த அரசாங்க காலத்தில் சஜின் வாஸ் மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருந்தவேளை, அந் நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களால், 833 மில்லியன் ரூபா நஷ்டம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு இலஞ்சம் மற்று ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

