மன்னார் மனித புதைகுழி தொடர்பாக வதந்திகளை பரப்பாதீர்கள் – சட்ட வைத்திய அதிகாரி

226 0

மன்னார் மனித புதைகுழி தொடர்பான உண்மை விபரங்கள் வெளிவருவதற்கு முன்னர்  வதந்திகளை பரப்ப வேண்டாம் என மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 89 ஆவது நாளாக  இன்று புதன் கிழமை இடம் பெற்றது. இதன் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரம் இடம் பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பாரளுமன்ற உறுப்பினர் பத்ம உதய சாந்த குணசோகர மன்னார் மனித புதைகுழியில் கண்டு பிடிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அனைத்தும் விடுதலை புலிகளின் காலத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சிங்கள மக்களின் எச்சங்களாகவும் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

புலம் பெயர்ந்த தமிழர்  அமைப்புக்கள் இவ் மனித எலும்பக்கூடுகள் இராணுவத்தினரால் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்களினுடையது என திரிவு படுத்தி ஐக்கிய நாடுகள் சபைக்கு காண்பிக்கின்றனர்.

மனித புதைகுழி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இலங்கையிலேயே தடையவியல் நிபுணர்கள் இருக்கின்றனர்.

ஆனாலும் திட்ட மிட்ட வகையில் குறித்த புதை குழி தொடர்பான மாறுபட்ட என்ன கருவை தோற்றுவிப்பதற்காக இந்தியாவில் இருந்து தடையவியல் நிபுணர்களை அழைத்துவருவதற்கு மன்னார் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளனர்.

தற்போது மனித புதை குழியினை அகழ்வு செய்யும் பனியும் மனித எலும்புக்கூடுகளை  அப்புறப்படுத்தும் பணிகளே நடை பெறுகின்றது.

குறித்த மனித எலும்புக்கூடுகளின் காலப்பகுதி மற்றும் ஏனைய விபரங்களை அறியும் ஆய்வு பணி ஆரம்பிக்கப்படவில்லை.

நாங்கள் தற்போது முழுமையாக அகழ்வு பணியையே மேற்கொள்கின்றோம். எனவே யாராக இருந்தாலும் மன்னார் புதைகுழி தொடர்பான உண்மை நிலையை அறியாது எந்தவித கருத்துக்களையும் தொரிவிக்க வேண்டாம்.

என்னுடன் இணைந்த குழுவினரின் முழுமையான ஆய்வின் பின்னர் துல்லியமான தகவல்களை வழங்குவோம். எனவே அது வரை பிழையான கருத்துக்கள் , விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

கடந்த வாரம்; மன்னார் மனித புதை குழியை பார்வையிடுவதற்காக வந்த இந்திய சிவில் சமூக உறுப்பினர்கள்  வெறுமனே நீதிமன்ற அனுமதியுடன் புதைகுழியை பார்வையிடுவதற்கு பார்வையாளர்களாக  வந்தார்களே தவிர வேறு எந்த விதமான காரணங்களுக்காகவும் வருகை தரவில்லை.இது வரை 185 மனித எலும்புக்கூடுகள்  குறித்த வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 179 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Leave a comment