மக்கள் ஆதரவை பெற்று எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற உழைப்போம்!

197 0

மக்கள் ஆதரவை பெற்று எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற உழைப்போம் என்று அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக மடல் எழுதியுள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அதிமுக தொண்டர்களுக்கு நேற்று எழுதியுள்ள மடல்:எம்ஜிஆர். தமிழக மக்கள் மீது கொண்ட எல்லையில்லாத அன்பின் அடையாளமாக உருவாக்கிய நம் இயக்கம் 46 ஆண்டுகளை கடந்து 47வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

1972ம் ஆண்டு அக்டோபர் திங்கள் இயக்கம் தோன்றிய நாளையும், அதற்கு முன்னும், பின்னும் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளையும் நாம் அனைவரும் பசுமையாக நினைவில் வைத்திருக்கிறோம்.எம்.ஜி.ஆர். தன்னுடைய பொன்னான நேரத்தையும், கடின உழைப்பையும், சிரமப்பட்டு சேர்த்த பெரும் செல்வத்தையும் வாரி வழங்கி, அ.தி.மு.க.வை வளர்த்தார். அதிமுக வளர்ச்சிக்கும், ஆட்சி அதிகாரம் வழியாக தமிழக மக்களின் வாழ்க்கைத்தர உயர்விற்கும் ஜெயலலிதா உழைத்த உழைப்பை நாம் நேரில் கண்டோம். தன்னையே அர்ப்பணித்து, இருள் அகற்ற உருகும் மெழுகாய் வாழ்ந்து, தியாகத்தில் தோய்ந்து அதிமுகவை காப்பாற்றினார். மக்களுக்கு தொண்டாற்ற ஓர் அருமையான நல்லரசையும் நிறுவிச் சென்றிருக்கிறார்.

எம்ஜிஆர் அரசியல் பாதையை அறியாதவர்களும், ஜெயலலிதாவின் தியாகத்தின் உயர்வை மதிக்காதவர்களும், திடீர் தலைவர்களாக முளைத்து அதிகார போதையில் திளைக்க மனக்கோட்டை கட்டுபவர்களும், நம் கழகத்தை அசைத்துப் பார்க்க நினைத்து, இன்று மக்களால் அடையாளம் காணப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளனர்.அதிமுகவையும், அதன் தொண்டர் பலத்தையும் எளிதாக எடை போட்டுவிட்டு அரசியல் பயணத்தை தொடங்கியவர்கள் இன்று, அதிமுக இருக்கும் மக்கள் செல்வாக்கின் மகத்துவத்தை கண்டு அஞ்சி நடுங்கி கிடக்கின்றனர்.அதிமுகவை தொடர் ந்து வெற்றி பாதையில் வழிநடத்தி செல்ல நாம் அனைவரும் உறுதி ஏற்கும் தருணம் தான் அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நம் பொது வாழ்வு பயணத்தை தொடர்ந்திட இந்நாளில் சபதம் ஏற்போம்.  தமிழக மக்களின் பேரன்பை பெற்றிருக்கும் நம் இயக்கத்தை மேலும் வலுப்படுத்திட அயராது உழைப்போம்.  மக்கள் ஆதரவை பெற்று எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற உழைப்போம். அதிமுகவை எந்நாளும் நம் கண்களென காப்போம்.இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

Leave a comment