அடுத்த ஆறு மாதங்களுக்குள் அரசுக்கு சொந்தமான இரண்டு ஹோட்டல்கள் விற்பனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.
ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துடன் நடந்த ஒரு நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அதன்படி, தற்போது நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற கொழும்பு ஹையட் ஹோட்டல் கட்டிடம் மற்றும் ஹில்டனின் ஹோட்டல் ஆகியவற்றின் அரசின் பங்குகள் இவ்வாறு விற்பனை செய்யப்பட உள்ளது.
458 அறைகள் மற்றும் 100 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட ஹையட் ஹோட்டல் கட்டிடம் சொந்தமான கௌ்வில் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் உரிமை அரசுக்கு சொந்தமானது.
ஹில்டன் ஹோட்டலின் 51 சதவீத பங்கு அரசுக்கு சொந்தமாக உள்ளது. இந்த இரண்டு ஹோட்டல்களினதும் உரிமையை விற்பனை செய்வதன் மூலம் 500 மில்லியன் டொலரை பெற்றுக் கொள்ள அரசு எதிர்பார்த்துள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான பெரிய அளவிலான வணிக நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் செலவுத் திறன் ஆகியவற்றை உருவாக்குவதை விரைவுபடுத்துவதற்கான மூலோபாய சீர்திருத்தங்களின் தேவையை சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் வலியுறுத்தியிருந்தமை கூறத்தக்கது.