புலிக்கொடி மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட 12 பேருக்கும் விளக்கமறியல்

210 0

ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த ஜூன் மாதம் புலிக்கொடி மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட 12 பேரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி புலிக்கொடி மற்றும் வெடிப்பொருட்களுடன் முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட 09 பேரை முதற்கட்டமாகப் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் துணுக்காய், கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்த மேலும் இருவர் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதோடு மேலும் ஒருவர் கடந்த மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றில் சரணடைந்தார்.

இதனையடுத்து குறித்த வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் ந.சுதர்சன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த 12 பேரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment