மர்ம பொருள் வெடித்ததில் மீனவர் பலி

206 0

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பொருளை எடுத்து சோதனைக்கு உற்படுத்தியபோது மர்ம பொருள் வெடித்ததில் மீனவர்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் நேற்று  இரவு 11.30 மணியளவில் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து படகு ஒன்றில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

இதன் போது பள்ளிமுனை- நாச்சிக்குடா கடற்பகுதியில் மிதந்து வந்த மர்மப்பொருளை குறித்த மீனவர்கள் அவதானித்துள்ளனர்.

இதன் போது ஜேசு ரஞ்சித் 39 வயதுடைய மீனவர் குறித்த மர்மப்பொருளை எடுத்து படகினுள் வைத்து சோதனைக்கு உற்படுத்தியதாக தெரிய வருகின்றது.

இதன் போது குறித்த மர்மப்பொருள் வெடித்ததில் ஜேசு ரஞ்சித்   உடல் சிதறி பலியானதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த படகில் இருந்த ஏ.ஏ.சித்தி பிகிராடோ மற்றும் எம்.அகஸ்ரின் பிகிராடோஆகிய இரு மீனவர்களும் படுகாயமடைந்ததோடு,அந்தோனி பிகிராடோ என்பவர் சிறு காயங்களுக்கு உள்ளாகினார்.இந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலம் உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு,காயமடைந்தவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.குறித்த சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment