பழைய முறையைப் பின்பற்றி 22 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாதி பாளையம் மற்றும் கொளப்பலூர் ஆகிய ஊராட்சிகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ.54 கோடி மதிப்பில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது.
இந்த கட்டிட பணியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமிபூஜையுடன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நம்பியூர், எலத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசு பள்ளியிலும் படித்த மாணவர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு உதவவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டதன் அடிப்படையில் மனிதநேயம் மிக்கவர்கள் அன்புள்ளம் கொண்டவர்களும் முன் வந்துள்ளனர்.
அவர்களுடன் அரசும் இணைந்து தமிழகத்தில் உள்ள 57 ஆயிரம் அரசு பள்ளிகளில் தனியாரை மிஞ்சுகின்ற அளவிற்கு கடடமைப்பு வசதிகளுடன், உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் நல்லாசிரியர் விருது இதுவரை 22 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 1 ஆசிரியரை தேர்வு செய்திருக்கிறார்கள்.
மத்திய அமைச்சருடன் தொடர்பு கொண்டுள்ளேன். மீண்டும் பழைய முறையை பின்பற்ற வேண்டும். 22 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்துரவிச் சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம் சிறுவலூர் மனோகரன், பிரினியோ கணேஷ், கந்த வேல் முருகன், காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.