கோவையில் கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம்!

234 0

கருணாநிதிக்கு கோவையில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு கருணாநிதியின் அரும்பணிகள் குறித்து பேசினார்கள்.

மறைந்த முன்னாள் முதல் -அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் கோவை இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

கருணாநிதியின் புகழை போற்றும் வகையில், ‘மறக்கமுடியுமா கலைஞரை’ என்ற தலைப்பில் நடிகர், நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள். அப்போது அவர் ஆற்றிய அரும்பணிகள், சம்பவங்களை நினைவுகூர்ந்தனர்.

தெலுங்கு நடிகர் மோகன்பாபு பேசும்போது கூறியதாவது:-

நான் பிறந்தது ஆந்திரமாநிலம் சித்தூர் பகுதி என்றாலும், சென்னையில்தான் சிறுவயது முதல் பள்ளிப்படிப்பையும், கலையுலக பயணத்தையும் தொடங்கினேன். தமிழ்த்தாயின் மடியில் வளர்ந்துதான் இந்த அளவுக்கு வளர்ந்தேன். கருணாநிதியை எனது வாழ்வில் 4 முறை நான் நேரில் சந்தித்து உள்ளேன். கருணாநிதி தமிழர்களுக்கும், தமிழ் மண்ணுக்கும் கிடைத்த பொக்கிஷம். அவர் திரையுலகில் ஆற்றிய பணியை மறக்க முடியுமா? யாராலும் அழிக்கத்தான் முடியுமா?.

மு.கருணாநிதி என்றால், மு-முன்னுதாரணம், க-கருணை, ரு-ருத்ரம், ணா-நாத்திகம், நி-நிதானம், தி-திராவிடம் ஆகும். அண்ணாவுக்கு பின்னர் 50 ஆண்டுகாலம் தி.மு.க.வை தாங்கி பிடித்தவர் கருணாநிதி.

கருணாநிதியின் கனவை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார். அவர் முதல்-அமைச்சர் ஆகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் ராதாரவி பேசும்போது கூறியதாவது:-

கலைஞர் என்றால் அது கந்தகசொல். யார் போனாலும் மீண்டும் அவரிடம் திரும்பி வந்து விடுவார்கள். என்னையும் சேர்த்து தான் கூறுகிறேன். சினிமா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கைவிடுத்தேன். அதனை அவர் நிறைவேற்றி தந்தார். சமூக நீதிக்காக பாடுபட்ட அரும்பெரும் தலைவர். அரவாணிகளுக்கு திருநங்கை என்ற பெயரையும், உடல் ஊனமுற்றவர்களுக்கு மாற்றுத்திறனாளி என்ற பெயரையும் அவர் அளித்தார்.

நாட்டை காப்பாற்ற தி.மு.க. இருக்க வேண்டும். தி.மு.க.வை காப்பாற்ற தளபதி இருக்க வேண்டும். கலைஞரின் கனவை அவர் நிறைவேற்றுவார்.இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

சினிமா மட்டுமல்ல, தென்னிந்திய அரசியலுக்கும் தலைநகரம் சென்னைதான். இப்போது தலைநகரம் இருக்கிறது. ஆனால் தலைவன் இல்லை. நான் நேரடியாக அரசியல் பேசுவேன் என்று நினைத்துக்கூட பார்த்தது இல்லை. கருணாநிதி பேசிக்கொண்டு இருந்தவரை அந்த அவசியம் என்னை போன்றவர்களுக்கு ஏற்படவில்லை.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்று மாற்றத்துடிக்கிற அத்தனை பிரிவினை சக்திகளையும் அவர் எதிர்த்து நின்று நம்மை பாதுகாத்து இருக்கிறார். கருணாநிதி இறந்த பிறகுதான் என்னை போன்றவர்கள் மதவாதத்தை எதிர்த்து பேச தொடங்கிவிட்டனர். அவரின் நிழலில் பாதுகாப்பாக இருந்திருக்கிறோம் என்பது அவருடைய மறைவுதான் கன்னத்தில் அறைந்து உணர்த்தி இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் பிரபு பேசும்போது கூறியதாவது:-

தனது நண்பனின் மகனாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களை சரிசமமாக பார்ப்பவர் கருணாநிதி. தனது நண்பர் சிவாஜி கணேசனின் சிலையை சொன்ன இடத்தில் வைக்க முடியவில்லை என்று அவர் எப்படி தவித்தார் என்பது எங்களுக்கு தெரியும். அதற்கு பிறகு அவர் சொன்ன மாதிரியே சொன்ன இடத்தில் வைத்தார்.

ஆனால் சில சச்சரவுகள் வந்ததால் அதை எடுத்து வேறு இடத்தில் வைத்து விட்டார்கள். அந்த சிலையை மீண்டும் அந்த இடத்தில் மு.க.ஸ்டாலின் வைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் ராஜேஷ் பேசும்போது கூறியதாவது:-

குருவை மிஞ்சாத சிஷ்யன் கருணாநிதி. தந்தை பெரியார் 94 ஆண்டுகள் 68 நாட்கள் வாழ்ந்தார். கருணாநிதி 94 ஆண்டுகள் 65 நாட்கள் வாழ்ந்தார். கருணாநிதி ஒரு சாதனை சரித்திரம், வாழ்ந்தபோதும் புகழுடன் வாழ்ந்தார். மறைந்தபோதும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினார்கள்.

டைரக்டர் பாரதிராஜா, நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ், பிரகாஷ்ராஜ், ராதாரவி, பிரபு, ராஜேஷ், நாசர், மயில்சாமி, நடிகை ராதிகா, தெலுங்கு நடிகர் மோகன்பாபு ஆகியோர் கலந்துகொண்டு கருணாநிதி கலைத்துறை மற்றும் பொதுவாழ்வில் அவர் ஆற்றிய அரும்பணிகள் குறித்து புகழ்ந்து பேசினார்கள்.

நடிகர், நடிகைகளுக்கு கருணாநிதியின் உருவப்படங்களை கோவை சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. நா.கார்த்திக் நினைவு பரிசாக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரிகள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொங்கலூர் பழனிசாமி, மு.பெ.சாமிநாதன், பொன்முடி, அமிர்தம், உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. பிரமுகர்கள், கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment