மன்னார் சதொச நிலையதிற்கான கட்டடப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழு பூரண ஒத்துழைப்பு வழங்குமென காணாமல் போனோர் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உதவுவதற்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மன்னாரில் தற்போது இடம்பெற்றுவரும் மனித எச்சங்கள் தொடர்பான அகழ்விற்கு ஆணைக்குழு நேரடியான பங்களிப்பினை வழங்குவதுடன் அது தொடர்பான பணி விடயங்களையும் மதிப்பீடு செய்து வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்க தகவல்திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஜெயதீபா புண்ணியமூர்த்தி, ஓய்வுபெற்ற மேஜர் ஜனரல் மொகந்தி அந்தோனி பீறிஸ், சோமசிறி லியனகே, மற்றும் கணபதிப்பிள்ளை வேந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.