எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதா? அல்லது எதிராக வாக்களிப்பதா?

262 0

மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் முறைமையின் எல்லை நிர்ணய அறிக்கை மீதான விவாதம் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதுடன் அன்றைய தினம் மாலை வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கட்டாயம் அவசியமாகும். இதன்படி பாராளுமன்றத்தின் அதிக ஆசனங்களை கொண்ட கட்சி என்ற வகையில் எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதா? அல்லது எதிராக வாக்களிப்பதா? என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி வியாழக்கிழமை இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளது.

எனினும் கட்சியிலுள்ள சிறுப்பான்மை பிரதிநிதிகள் வாக்களிப்பில் இருந்து விலக கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகள் எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க கூடும் என்றும் தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் வியாழக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் உள்ள குழு அறையில் கூடவுள்ளது.

மாகாண சபைகளுக்கான புதிய தேர்தல் முறைமையின் எல்லை நிர்ணயத்தில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் சிறுப்பான்மை இன மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி புதிய தேர்தல் முறைமைக்கு சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

அதேபோன்று அரசாங்கத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தல் தாமதாகும் எனில் பழைய முறைமையின் கீழ் உடன் தேர்தல் நடத்த வேண்டும் என தீர்மானித்திருந்தது. பழைய முறைமையின் பிரகாரமாவது உடன் தேர்தலை நடத்த வேண்டும் கூட்டு எதிரணியும் வலியுறுத்தி வருகின்றன.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் பழைய முறைமைக்கு மீண்டும் செல்வது உகந்தது அல்ல. ஆகவே புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

தேர்தல் முறைமை தொடர்பாக பல தடவை கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்ற போதும் இணக்கபாடு எட்டப்படவில்லை. இதனால் இறுதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் புதிய தேர்தல் முறைமையின் எல்லை நிர்ணய அறிக்கையை வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு எடுத்து வாக்கெடுப்பும் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். அதாவது சபைக்கு வருகை தராத பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவையாகும். புதிய முறைமைக்கான எல்லை நிர்ணய அறிக்கைக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை என்றால் பழைய முறைமை மீண்டும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்து அதனை நிறைவேற்றுவதற்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியமாகும்.

இந் நிலையில் பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களுக்கு உரித்தான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு எல்லை நிர்ணய அறிக்கையை நிறைவேற்ற அவசியமாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு சிலர் எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதுடன் கட்சியின் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் இருந்து விலக கூடிய வாய்ப்பும் உள்ளது.

ஆகவே புதிய தேர்தல் முறைமைக்கான எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதா? அல்லது எதிராக வாக்களிப்பதா? என்பது தாெடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாளை தீர்மானம் எடுக்கவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூடவுள்ள பாராளுமன்ற குழு கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

எனினும் சிறுப்பான்மை கட்சிகள் எல்லை நிர்ணய குழு அறிக்கைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a comment