முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன உருவாக்கிய ஜனாதிபதி பதவியை வகித்தவர்களுக்கு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ்வரும் “இரு தடவைகள் பதவி வகித்தவர்கள் மீண்டும் ஜனாதிபதி பதிவிக்கு நியமிக்க முடியாது” என்ற ஏற்பாடு ஏற்புடையதாக அமையப் போவதில்லை.
எனவே முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்.
எனவே அது குறித்த நீதிமன்ற நடவடிக்கைகளை அடுத்த மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளவுள்ளோம். அரசியலமைப்பின் 19 அவது திருத்தச் சட்டத்தின் கீழ் புதிய ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன உருவாக்கிய ஜனாதிபதி பதவியும், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி பதிவியும் வெவ்வேறானவைகளாகும்.
இரண்டு தடவைகள் ஜனாதிபதிகளாக பதவி வகித்தவர்கள் இருவர் உள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர்களேயாவர். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் அவ்விருவருக்கும் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டச் சிக்கல் ஏதும் இல்லை என நாம் எதிர்பார்க்கிறோம்.
ஏனெனில் ஜனாதிபதிப் பதவி அரசியலமைப்பின் 30 ஆவது சரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அமைத்த குறித்த அரசியலமைப்பில் தெளிவான சரத்தொன்றுள்ளது. அதாவது “ஜனாதிபதிப் பதவியை உறுதிப்படுத்தும்” சரத்தென அது குறிப்பிடப்பட்டுள்ளது. அரசிலயலமைப்பின் 19 அவது திருத்தச் சட்டத்தின் மூலம் அந்த சரத்து நீக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சரத்தில் திருத்தம் முன்வைக்கப்படவில்லை. மாறாக அது நீக்கப்பட்டுள்ளது.
எனவே அதன் பின்னர் புதிய ஜனாதிபதிப் பதவியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. 19 திருத்தத்தின் 8 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிப் பதவியின் அதிகாரங்கள் பாரியளவில் நீக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன அமைத்த ஜனாதிபதிப் பதவிக்கும் 19 திருத்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஜனாதிபதிப் பதவிக்குமிடையில் பாரிய வேறுபாடு உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி முறைமையின் கீழ் அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்கும் பூரண அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது. அது மாத்திரமல்லாது அமைச்சர்களையும் நீக்க முடியும். அதில் பிரதமரின் பொறுப்போ அதிகாரமோ இல்லை. பிரதமரின் அபிப்பிராயம் பெற வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்.
எனினும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் எட்டாவது பிரிவின் கீழ் அமையும் ஜனாதிபதியினால் அவ்விரண்டு காரியங்களையும் மேற்கொள்ள முடியாது. ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனைக்கு அமைவாகவே அமைச்சர்களை நியமிக்க வேண்டும். பிரதமரின் ஆலோசனை பெறாது அவ்விடயத்தில் தீர்மானம் மேற்கொள்ள முடியாது. அமைச்சர்களை நீக்குவதாயினும் பிரதமரின் ஆலோசனையின் கீழே அதனைச் செய்ய வேண்டும்.
மேலும் முன்னைய ஜனாதிபதி முறைமையின் கீழ் பாராளுமன்றத்தை ஒரு வருட காலத்தின் பின்னர் கலைக்கும் அதிகாரம் இருந்தது. எனினும் 19 ஆவது திருத்தச்சட்டத்தின மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள ஜனபதிபதி முறைமையின் கீழ் அதனைச் செய்ய முடியாது. நான்கரை வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பதாயின் பாராளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் முன்னைய ஜனாதிபதி முறைமையின் பிரகாரம் ஜனாதிபதிக்கு எதிராக பதவிக் காலத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது.
ஆகவே இவ்வாறானவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது 19 அவது திருத்தச் சட்டத்தின்கீழ் புதிய ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன் உருவாக்கிய ஜனாதிபதி பதவிக்கும், அரசியலமைப்பின் 19 ஆவதுதிருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி பதவிக்குமிடையில் வேறுபாடு உள்ளது. ஆகவே அவ்விரு பதவிகளும் வேறுபட்டவையாகும்.
எனவே 19 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ், குறித்த பதவியை இரு தடவைகள் வகித்தவர்கள் மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கப்பட முடியாதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் முன்னர் உள்ள ஜனாதிபதிப் பதவியல்ல, 19ஆம் திருத்தத்தின் பிரகாரம் அமைக்கப்பட்ட ஜனாதிபதி பதவியையே அது சுட்டிக்காட்டுகிறது. ஆகவே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ஏற்படுத்திய ஜனாதிபதி பதவியை வகித்தவவர்களுக்கு குறித்த ஏற்பாடு பொருந்தாது.
முன்னைய ஜனாதிபதி முறைமையின் கீழ் பதவி வகித்தவர்கள் தொடர்பில் புதிய ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதாக இருப்பின் அது குறித்து தெளிவான வசனத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும். மேலும் சட்டங்கள் எதிர்காலத்திற்கே பொருந்தும். எனினும் கடந்த காலங்களுக்கு பொருந்துமாக இருப்பின் அது தொடர்பில் தெளிவான வசனம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். 19 ஆவது திருத்தச் சட்டத்தில் அவ்வாறான தெளிவான வசனம் பயன்படுத்தப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர்களுக்கு குறித்த ஏற்பாடு பொருந்தாது.
இவ்விவகாரம் தொடர்பில் சட்ட அறிக்கையினை ஜனாதிபதியினால் மாத்திரம் பெற முடியும் என அமைச்சரவை அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். வேறு எவராலும் அதனைச் செய்ய முடியாதெனக் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவரின் கருத்து யதார்த்தமற்றதாகும்.
ஆகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் என்ற ரீதியில் குறித்த விவகாரம் தொடர்பிலான வழக்கை தாக்கல் செய்வதற்கு தயாராகவுள்ளேன். இது தொடர்பில் செப்படெம்பர் மாதம் ஆரம்பப்பிரிவில் முக்கிய நடவடிக்கை எடுக்கவுள்ளோம். மேலும் இது சம்பந்தாக ஜனாதிபதி சட்டத்திரணிகள் பலர் எம்டமுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.
அபேட்சரைத் தெரிவுசெய்யும் பிரச்சினையாக இதனை நோக்கக் கூடாது. இது சட்டச் சிக்கலை தீர்த்துக்கொள்ளும் பிரச்சினைாகும். மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்னும் தெழிவான தீர்மானத்திற்கு வரவில்லை. அது தொடர்பில் பின்னர் தீர்மானிப்பார் எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.