நைஜீரியா – கிராமத்தை சுற்றி வளைத்து பயங்கரவாதவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி

191 0

நைஜீரியா நாட்டில் உள்ள கிராமம் ஒன்றை பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போகோ ஹரம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர். போகோ ஹரம் அமைப்பை தவிர ஐஎஸ் பயங்கரவாத அமைப்பும் அங்கு தாக்குதல் சம்வங்களை நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில், வடகிழக்கு நைஜீரியாவின் காசாமுல்லா மாகாணத்தில் கிறிஸ்துவர்கள் கணிசமாக வசிக்கும் மைலாரி எனும் கிராமத்தை சூழ்ந்து அதிகாலை நேரத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், அப்பாவி பொதுமக்கள் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக அருகே உள்ள முகாம்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்புகளும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment