தென்னிலங்கை மீனவர்கள் வடக்கிற்கு பருவகால தொழிலுக்காக வரலாம்!

455 0

தென்னிலங்கை மீனவர்கள் வடக்கிற்கு பருவகால தொழிலுக்காக வரலாம். ஆனால் அவர்கள் வடமாகாணத்திலேயே நிரந்தரமாக தங்கியிருக்க முயற்சிப்பதை நாம் கண்டிக்கிறோம் என, தேசிய ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அ.ஜேசுதாஸ் கூறியுள்ளார்.

வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நேற்று யாழ்.ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அ.ஜேசுதாஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

“தென்னிலங்கை மீனவர்கள் வடமாகாணத்தில் தங்கியிருக்கும் இடங்களில் நடைபெறும் சம்பவங்கள் நல்லிணக்கத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைகின்றது.

தென்னிலங்கை மீனவர்கள் பருவகால மீன்பிடி தொழிலுக்காக வடமாகாணத்திற்கு வருவதில் பிழையில்லை. ஆனால் தொழிலுக்காக வரும் மீனவர்கள் அங்கேயே தங்குவது கண்டிக்கதக்க விடயமாகும்.

மேலும் நிரந்தரமாக தங்கும் மீனவர்களுக்கு கடற்படையினரும், பொலிஸாரும் பூரணமான ஒத்துழைப்பை வழங்குகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் சட்டத்திற்கு மாறான தொழில்களை தடுத்து நிறுத்த இயலாத நிலைமை காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் வடமாகாண மீனவர்கள் தென்னிலங்கைக்கு சென்று இவ்வாறு எந்த அனுமதியும் இல்லாமல் வாடிகளை அமைத்து நிரந்தரமாக தங்க இயலுமா? என கேள்வி எழுகிறது.

இந்திய மீனவர்கள் எமது கடல் வளங்களை அழித்தது போதாதென இப்போது தென்னிலங்கை மீனவர்களும் எமது கடல்வளங்களை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனை கட்டுப்படுத்த இயலாத அரசாங்கம் எப்படி இந்திய மீனவர்கள் அத்துமீறல் விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் நம்புவது? மேலும் வடமாகாண மற்றும் நாடு தழுவியரீதியாக மீனவர்களுக்கிடையில் ஒரு கூட்டிணைவு இருக்க வேண்டும்.

குறிப்பாக முல்லைத்தீவு நாயாறு பகுதியில் மீனவர்களுக்கு பிரச்சினை என்றால் மற்றய மீனவர்கள் குரல் கொடுப்பதாக இல்லை. ஆனால் குரல் கொடுக்கவேண்டும். இதனோடு சட்டத்திற்கு மாறான மீன்பிடி முறைகளை முற்றாக தடைசெய்யவேண்டும்.

அதற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இதனை வலியுறுத்தியும், மீனவர்களின் காணிகள் சுவீகரிப்பை கண்டித்தும் எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளோம்” என்றார்.

Leave a comment