, அரசாங்கம் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறது-பந்துல

272 0

முன்னாள் ஜனாதிபதியை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு அரசாங்கம் தனக்கு தானே பாதாள குழியினை தோண்டிக் கொள்கின்றது.  அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும்  அரசாங்கத்திற்கே எதிர் விளைவுகளை  ஏற்படுத்தும்  என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று மஹிந்த ராஜபக்ஷவிடம் பொய்யான  குற்றச்சாட்டு தொடர்பில் விசாரனைகளை மேற்கொண்டனர். இவ்விடயத்தின் பின்னணியில் அரசாங்கத்தின் இராஜதந்திரங்களே காணப்படுகின்றது. எமக்கு எதிராக அரசாங்கம் கடந்த மூன்று வருட காலமாக  குற்றச்சாட்டுக்களை மாத்திரமே மேற்கொண்டுள்ளது.

முறையற்ற பொருளாதார கொள்கைகளை கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாகத்தின் காரணமாக  இன்று பொதுமக்கள்  குறிப்பாக நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை விடுத்து எம்மீது குற்றம் சுமத்துகின்றது.

இன்று  மக்கள் தேசிய அரசாங்கத்தின் ஆட்சியின் பலனை நன்கு  அனுபவித்து விட்டார்கள். கடந்த பெப்பரவரி மாதம் இடம் பெற்ற  உள்ளூராட்சிமன்ற தேர்தலின் பெறுபேறுகள் அரசாங்கத்திற்கு பாரிய பதிலடியினை ஏற்படுத்தியது. அன்றிலிருந்து அரசாங்கம் தனது வேலைத்திட்டங்களிலும், அமைச்சரவையிலும் பாரிய மாற்றங்களை எற்படுத்தியது.  ஏற்படுத்திய மாற்றங்களினால் இதுவரை காலமும் எவ்வித மாற்றங்களும் மக்கள் மத்தியில் ஏற்படவில்லை.

கடந்த அரசாங்கத்தினை சட்டத்தின் முன் குற்றவாளிகளாக காட்டி தான் தேசிய அரசாங்கம் மக்கள் மத்தியில் நற்பெயரை  பெற வேண்டிய அவசியம் ஏதும் இல்லை மிகுதியாக உள்ள காலத்தில் மக்களுக்கு சிறந்த சேவையினை  ஆற்றினால் மக்கள் தேசிய  அரசாங்கத்தை விரும்பினால் தோற்றிவிப்பார்கள் ஆனால் 2015ஆம் ஆண்டு செய்த தவறை மீண்டும் மக்கள் ஒரு போதும் செய்ய மாட்டார்கள்.

சர்வதேசத்தின் குப்பையாக இன்று இலங்கை மாற்றப்பட்டு வருகின்றது. சிங்கப்பூர் நாட்டுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பாரிய  விளைவுகளை  ஏற்படுத்தும் என்று  தெரிந்தும் அரசாங்கம்  அதனை அமுல்படுத்தும் நோக்கத்திலே செயற்படுகின்றது. கடந்த காலங்களில் இந்த உடன்படிக்கையினை கைவிட வேண்டும் என்று பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தியும் அரசாங்கம் அவற்றை கவனத்திற் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வருகின்றது. இவ்வாறு முறையற்ற விதத்தில் செயற்படும் அரசாங்கம் இன்று மஹிந்தவின் மீதும் சேறு பூச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இடம் பெறவுள்ள மாகாணசபை மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் பொது எதிரணிக்கே வெற்றி என்ற விடயத்தை நன்கு அறிந்தே தற்போது அரசாங்கம் எமக்கு எதிராக காய் நகர்த்தி வருகின்றது. எமக்கு எதிராக அரசாங்கம் செயற்படும் பட்சத்தில் அது அரசாங்கத்திற்கே எதிர் வினைவுகளை ஏற்படுத்தும்” என்றார்.

Leave a comment