இராணுவத்தினரின் ட்றக் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் அனந்தி!

228 0

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் ட்றக் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவரின் குடும்பத்தின் நிலை தொடர்பில் இனறு வடமாகாண மகளீர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அனந்தி சசிதரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

கடந்த 15.ஆம் திகதியன்று கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாரதிபுரம் பகுதியை சேர்ந்த 51 வயதான க.குகனேஸ்வரன் என்ற 5 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற அனந்தி சசிதரன், குடும்பத்தினருடன் கலந்துரையாடி குடும்ப நிலைமைகளை கேட்டறிந்த அவர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அனந்தி சசிதரன்,

பயன்படுத்த முடியாத பொருத்தமற்ற வாகனங்களை படையினர் பயன்படுத்தி வருகின்றனர். குறித்த சம்பவம் விபத்தாக இருந்தாலும், பாவணைக்கு உதவாத வாகனத்தை செலுத்தியமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது,

குறித்த வாகனம் பிறேக் போதுமானதாக இல்லாமையினாலேயே விபத்த இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இவ்வாறு படையினர் பாவணைக்கு உதவாத வாகனங்களை செலுத்துகின்றனர். இவ்வாறான வாகனங்களை கடற்படையினரும், இராணுவத்தினரும் பயன்படுத்துகின்றனர்.

இன்று குறித்த விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த குடும்பத்தின் நிலை என்ன? 5 பிள்ளைகளை கொண்ட இந்த குடும்பத்தின் நிலை தொடர்பில் யார் பொறுப்பு கூறப்போகின்றார்கள். இதற்காகவே வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என நாம் அழுத்தம் கொடுத்து வருகின்றோம்.

இந்த குடும்பம் மீள்குடியேறிய காலம் தொட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழ்கின்றது. தற்காலிக கொட்டகையில் வாழும் இவர்களுக்கு யார் பாதுகாப்பளிப்பது, இவ்வாறான தகர கொட்டகையில்தான் இவர்கள் வாழ்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் அரச அதிகாரிகள் விரைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

சொந்தமாக காணியோ, வீடோ அற்ற நிலையில் சகோதரி ஒருவரின் தற்காலிக கொட்டகையில் குறித்த குடும்பம் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடதக்கது,

Leave a comment