எல்லை நிர்ணய அறிக்கை 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் – மஹிந்த சமரசிங்க

260 0

மாகாண சபைகள் தேர்தலை, புதிய முறைமையின் கீழ் நடத்துவதற்குத் தேவையான தொகுதிகளைப் பிரிக்கும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை, எதிர்வரும் 24ஆம் திகதியன்று, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அவ்வறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பில் விவாதிக்கப்பட்டதன் பின்னர், அவ்வறிக்கையை நிராகரிக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியுமெனத் தெரிவித்த அவர், அதன் பின்னரே மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்து​வதென்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்றார்.

மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றதெனத் தெரிவித்த அவர், அந்தத் தேர்தல், புதிய தொகுதி மற்றும் விகிதாசார முறைமைகளின் கீழ், விரைவில் நடத்தப்படவேண்டும் என்பதே தங்களுடைய கட்சியின் எதிர்பார்ப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.

Leave a comment