மஹிந்த நாளை வாக்கு மூலம் வழங்க தயார்

296 0

த நேசன் பத்திரிகையின் ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க தான் தயார் எனவும், இதற்காக நாளை (17) காலை 10.00 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்கள உதவிப் பொலிஸ் அதிகாரியொருவரின் தலைமையில் குழுவொன்று விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்குச் சென்று இந்த வாக்கு மூலத்தைப் பெறத் தயாராகி வருவதாகவும் கூறப்படுகின்றது.

கீத் நொயார் கடத்தல் சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு நான்கு தடவைகள் நேரம் கோரப்பட்ட போதும் அதற்கு அவர் பதிலளிக்க வில்லையெனவும், இதனால், அவரிடம் நேரம் ஒதுக்கித் தருமாறு கோரி அறிவித்தல் வழங்கப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கையொப்பத்துடன் கூடிய குறித்த அழைப்பாணை முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு கடந்த 12 ஆம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment