மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு குடியாத்தம் பகுதியில் அனுமதியின்றி சிலை நிறுவியதால் காவல்துறை அந்தச் சிலையை நள்ளிரவில் அகற்றியதால் பரபரப்பு நிலவியது.
50 ஆண்டுக்காலம் தி.மு.க-வின் தலைவராகவும் 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்தவர் கருணாநிதி. தனது 94 வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். கருணாநிதி மறைவுக்கு நாடு முழுவதும் தொண்டர்களும் பொது மக்களும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க மாவட்டப் பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி என்பவர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு முதன்முதலாகக் குடியாத்தம் பாலிடெக்னிக் கூட்டுசாலை பேருந்து நிறுத்தத்தில் உள்ள தி.மு.க கொடி கம்பத்தின் கீழ் கருணாநிதி உருவ சிலையை நிறுவியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் அனுமதியின்றி சிலை வைக்கக் கூடாது எனக் கூறி சிலையை அகற்றினர்.