கிளிநொச்சி தீ விபத்து (காணொளி இணைப்பு)

392 0

kilinochchi-fairகிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் புடவை மற்றும் பழக் கடைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன.

 
நேற்றிரவு எட்டு முப்பதுக்கும் ஒன்பது மணிக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து பழக் கடைகளும், 60க்கு மேற்பட்ட புடவை கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளன.

 
இதனால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளும் தீயில் எரிந்து நாகமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 
தீ பிடித்து எரிய தொடங்கிய நிலையில் வேகமாக வீசிய காற்று காரணமாக எல்லாக் கடைகளுக்கும் தீ வேகமாக பரவியுள்ளது.

 
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரின் நீர்த்தாங்கி மூலம் தீ அணைக்கும் முயற்சி மேற்க்கொள்ளப்பட்டது. இருந்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் கிளிநொச்சி மற்றும் கொக்காவில் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தின் தீ அணைக்கும் வாகனமும் கொண்டுவரப்பட்டு கடும் பேராட்டத்திற்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 
இதன்போது தீ அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்ட இராணுவத்தினரில் சிலர்தீக் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 
யுத்தத்தால் அனைத்தையும் இழந்த கிளிநொச்சி சந்தை வியாபாரிகள் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மீள்குடியேற்றத்திற்கு பின்னர் அம்பாள்குளம் பகுதியில் சந்தை ஆரம்பிக்கப்பட்ட போது அங்கு போதியளவு வியாபாரம் இன்றி வியாபாரிகள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தனர்.

 
இந்நிலையில் 2009க்கு முன் சந்தை இயங்கிய பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

 
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த சந்தை பகுதி மக்கள் பாவனைக்கு விடப்பட்டு மீன் மற்றும் மரக்கறி வியாபாரத்திற்கு நிரந்தர கட்டடிம் அமைக்கப்பட்டு வழங்கபட்ட நிலையில் ஏனைய வியாபார துறைகளுக்கும் தற்காலிக தகர கொட்டில்கள் அமைத்து வழங்கப்பட்டிருந்தது.
இந்த தற்காலிக கொட்டில்களே தீ பிடித்து எரிந்து அழிந்துள்ளன.

 
இதேவேளை கிளிநொச்சி நகரத்தில் சில வருடங்களுக்கு முன் தனியார் புடவை கடை ஒன்று தீயினால் எரிந்து அழிந்த போது கரைச்சி பிரதேச சபையினரிடம் தீ அணைப்பு படை ஒன்றின் அவசியம் குறித்து பல தரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டது ஆனால் அவர்கள் அதனை கருத்தில் எடுக்கவில்லை என்றும்  கிளிநொச்சி நகரத்தில் ஒரு தீ அணைப்பு படை இருந்திருக்குமாயின் ஒரு சில கடைகள் எரிந்த நிலையில் தீயை கட்டுப்படுத்தியிருக்க முடிந்திருக்கும் என்றும் வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 
மேலும் ஒரு வருடதிற்கு என வழங்கப்பட்ட குறித்த தற்காலி கொட்டில்களில் வியாபாரிகள் மூன்று வருடங்களுக்கு மேல் வியாபாரம் செய்து வருகின்ற நிலையில் கடந்த மாதம், தங்களுக்கு நிரந்தர கட்டடம் அமைத்து தருமாறு பல தரப்பினர்களிடமும் வியாரிகள் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.