ஏறாவூர் நகர கடைத்தெருவிலுள்ள நகைக்கடையொன்றுக்கு வந்த பெண்ணொருவர் தன்னை பெண் பொலிஸ் உத்தியோகத்தராக அறிமுகப்படுத்திக்கொண்டு நகைத் திருட்டில் ஈடுபட்டு தலைமறைவாகியிருந்தார்.
இந்நிலையில், சிசிரிவி காணொளிக் கமெராவில் பதிவாகியிருந்த காட்சியை ஆதாரமாகக் கொண்டு துரிதமாகச் செயற்பட்ட ஏறாவூர் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி நிரோஷன் பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர் குறித்த சந்தேக நபரான பெண்ணை கடந்த சனிக்கிழமை மாத்தளை நகரில் வைத்து கைது செய்தனர்.
மாத்தளை நாவுல பிரதேசத்தைச் சேர்ந்த அலோசியஸ் மெலின் டேனியல் (வயது 50) என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
அப்பெண்ணிடம் மேற்கொண்ட தொடர் விசாரணைகளின் நிமித்தம் தான் ஏறாவூர் நகைக்கடையில் திருடிய நகையை கதுறுவெல நகரில் விற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த விபரத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட பெண்ணுடன் மாத்தளையிலிருந்து கதுறுவெல நகருக்கு விரைந்த பொலிஸார் திருடப்பட்டு விற்கப்பட்ட குறித்த நகையைக் கைப்பற்றியதோடு அதனை வாங்கியவரையும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்கு மூலத்தைப் பதிவு செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான பெண் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி முன்னிலையில் சனிக்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது அவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றையதினம் சந்தேக நபரை அடையாள அணிவகுப்பிற்குட்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த பெண் நகைக்கடைக்குள் நுழைந்து தன்னை அறிமுகப்படுத்தியபோது தானும் தனது கணவரும் வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களாகக் கடமையாற்றுவதாகக் கூறியதோடு தனக்கு நகை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பெண்ணின் வேண்டுகோளுக்கிணங்க தங்க நகைகள் பார்வைக்கு காட்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது நகைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த பெண் தான் வங்கியிலிருந்து பணம் பெறவேண்டும் என்பதாகக் கூறி நகைக் கடையை விட்டு வெளியேறியுள்ளார்.
அதன் பின்னர் நகைக் கடை உரிமையாளர் நகைகளைச் சரிபார்த்தபோது ஒரு தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்தது.
சிசிரிவி கமெராவைப் பரிசோதித்தபோது தங்க மாலைகளில் ஒன்றை அப்பெண் சாவகாசமாகத் திருடி தனது கைப்பைக்குள் மறைத்துள்ள காட்சி சிசிரிவி யில் பதிவாகியிருந்மை குறிப்பிடத்தக்கது.