கல்விச் சேவை ஊழியர்கள் இடமாற்றக் கொள்கையை ஏற்க வேண்டும்- அகில விராஜ்

4416 21

அரச பணியாளர்களுக்கான இடமாற்றக் கொள்கை கல்விச் சேவை ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு சில குழுக்கள் பாடசாலை சமூகத்தை தவறான பாதையில் வழிநடத்திச் செல்ல முனைவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

குளியாப்பிட்டி கிரிந்தவ மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் ஐந்து வருடமே. அதனை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறே பாடசாலைகளில் நீண்டகாலம் பணியாற்றும் ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்வது கட்டாயமானது. இது அதிபர்களுக்கும் பொருந்தும். ஒரு அதிபர் சிறந்தவராக இருக்கும் பட்சத்தில் அவரது சேவை மற்றுமொரு பாடசாலைக்குத் தேவைப்படலாம். இதனை உணர்ந்து கொள்வது அவசியம் என அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டின் நலன்கருதி நல்ல வேலைகளை செய்யும் போது, அவற்றுக்கு முட்டுக்கட்டை போடுவது நல்லதல்ல. மாறாக அரசாங்கம் தனது காரியத்தை செவ்வனே நிறைவேற்ற இடமளிக்க வேண்டுமென கல்வி அமைச்சர் மேலும் கேட்டுக் கொண்டார்.

Leave a comment