தூக்குத் தண்டனையை கூறியது ஜனாதிபதி, அரசாங்கத்தின் இறுதித் தீர்மானம் இல்லை- தலதா

197 0

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரதான சிறைக் கைதிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்குவது என இறுதியான தீர்மானமொன்றுக்கு அரசாங்கம் இதுவரை வரவில்லையென நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் வழக்குகள் தொடர்பில் தெளிவுபடுத்திக் கொள்ளும் நடவடிக்கையை சட்ட மா அதிபர் திணைக்களம் ஊடாக முன்னெடுக்கவுள்ளோம்.

அளுகோசுவன் நியமனம் குறித்து பிரச்சினைப்பட்டுக் கொள்ளத் தேவையில்லை. அது இருக்கின்ற ஒரு பதவிதான். தற்பொழுது அந்தப் பதவிக்கு சுயேற்சையாக செயற்படவும் சிலர் முன்வந்துள்ளனர்.

தூக்குத் தண்டனை தொடர்பில் கருத்துத் தெரிவித்தது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இருப்பினும், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு தகவல்கள் திரட்டப்பட வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment