திருச்செங்கோடு அருகே கார்கள் மோதி விபத்து – தம்பதி உள்பட 4 பேர் பலி

1383 0

திருச்செங்கோடு அருகே கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் கணவன், மனைவி உள்பட 4 பேர் பலியானார்கள்.

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 56). கார் பழுதுபார்க்கும் பட்டறை நடத்தி வந்தார். இவரது மனைவி கவிதா (45). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வந்தார். இவர்களது மகன் அஸ்வந்த் (20).

நேற்று பிரபாகர், கவிதா, அஸ்வந்த் (20) ஆகியோர் ஒரு காரில் கருங்கல்பாளையத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அஸ்வந்த் காரை ஓட்டினார். திருச்செங்கோடு-ராசிபுரம் சாலையில் எலச்சிபாளையத்தில் மோர்பாளையம் பிரிவு ரோட்டில் கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது பெங்களூருவை சேர்ந்த சேர்ந்த ஆல்பர்ட் ஜான் (30), பிரதீப் (30), ஷாம்குமார் (29), சுனில் (29) ஆகியோர் மற்றொரு காரில் திருச்செங்கோடு நோக்கி சென்றனர். ஆல்பர்ட் ஜான் காரை ஓட்டினார்.

இவர்கள் வெண்ணந்தூர் மதியம்பட்டி சவுரிபாளையம் சென்றுவிட்டு வழிதெரியாமல் ராசிபுரத்தில் இருந்து பெங்களூரு செல்ல வேண்டியவர்கள் திருச்செங்கோடு நோக்கி வந்தனர்.

அஸ்வந்த ஓட்டிவந்த காரும், ஆல்பர்ட் ஜான் ஓட்டிவந்த காரும் மோர்பாளையம் பிரிவு ரோட்டில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இரு கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் உடல் நசுங்கிய பிரபாகர், கவிதா, அஸ்வந்த், ஆல்பர்ட் ஜான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பிரதீப், ஷாம்குமார், சுனில் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதி மக்கள் காயம் அடைந்தவர் களை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a comment