ஜனாதிபதி பதவியை பறிக்க முயற்சிப்பதாக பொய் புரளி-சுமந்திரன்

221 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவியை பறிப்பதற்காக நானும் ஜயம்பதி விக்ரமரட்ண மற்றும் சுரேன் பெர்ணான்டோ ஆகியோர் முயற்சிப்பதாக பொய் புரளி ஒன்றை தயாசிறி ஜய சேகர போன்றவர்கள் கிளப்பி விட்டிருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக பாராளுமன்றத்தினால் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு நடவடிக்கைகள் ஆரம்பமானபோது, அரசியலமைப்பு பேரவையினால் 10 நிபுணர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

அந்த நிபுணர் குழு வழிநடத்தல் குழுவுக்கு ஆலோசணை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. அவர்கள் கடந்த 2 வருடங்களாக வழிநடத்தல் குழுவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்கள்.

இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்ட போதும் இந்த குழு தான் ஆரம்ப வரைவு ஒன்றை வழிநடத்தல் குழுவுக்கு கொடுத்து அதனை வழிநடத்தல் குழு தயார் செய்து அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பித்தது.

இடைக்கால அறிக்கைக்கு பிறகு வழிநடத்தல் குழு அரசியலமைப்பு பேரவைக்கு ஒரு இறுதி அறிக்கையையும், அதனோடு கூட புதிய அரசியலமைப்பு வரைபையும் சமர்பிக்க வேண்டும் என பாராளுமன்ற பிரேரணை கூறுகிறது.

அந்த இறுதி வரைபை தயாரிப்பதற்காக நிபுணர் குழு இடத்தில் ஒரு ஆவணத்தை வழிநடத்தல் குழு கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி கேட்டிருந்தது.

அதனை ஓரிரு மாதங்களில் செய்யலாம் என நிபுணர்கள் கூறியதால் அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஜனவரி இறுதியில் அந்த ஆவணம் தயாராகவில்லை.

ஒரு நிபுணர் முதல் வரைபு ஒன்றை செய்து அதில் மற்றவர்களின் இணக்கம் பெற்றால் அந்த ஆவணத்தை கொடுக்கலாம் என யோசனை செய்து ஒரு ஆவணம் தயாரிக்கப்பட்டது.

ஆனால் அந்த நிபுணர் குழுவில் இரு பெண்மணிகளால் அது தமக்கு பொருத்தமற்றது. அனைவரும் சேர்ந்திருந்து ஒரு ஆவணத்தை தயாரிக்க வேண்டும் என கூறப்பட்டது.

சென்ற மாத இறுதியில் அரைவாசி கூட நிறைவேறவில்லை. இறுதியாக அந்த ஒரு நிபுணர் தயாரித்த ஆவணத்தில் மற்றவர்கள் தம் கருத்தை கூறி மாற்றியமைத்து இறுதியாக 6 பேர் இணங்கியதன் அடிப்படையில் அந்த அறிக்கை வழிநடத்தல் குழுவுக்கு முன்பாக கடந்த 18 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

இந்த முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த இரு பெண் நிபுணர்கள் தாம் தயாரித்த ஒரு அறிக்கையை வழிநடத்தல் குழுவுக்கு சமர்ப்பித்தார்கள். இதனால் வழிடத்தல் குழுவுக்கு குழப்பம் உருவானது. 6 பேர் ஒரு அறிக்கையையும், 2 பேர் ஒரு அறிக்கையையும், மற்றைய இருவர் எதுவும் கூறாமல் இருந்ததாலும் இந்த குழப்பம் உருவானது.

இதனை அலசி ஆராய்ந்த வழிநடத்தல் குழு நிபுணர் குழுவுக்கு கூறியுள்ளது. 2 அறிக்கைகளையும் பார்த்து பொதுவான அறிக்கையை 2 வாரத்திற்குள் கொடுக்குமாறு, ஒரு தடவை அவர்களுக்குள் இணக்கம் ஏற்படுமா என முயற்சிக்குமாறும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

இது நடந்து முடிந்து மறுநாள் 6 பேர் கொண்டுவந்த அறிக்கையை சபையில் எடுத்துக்காட்டி தயாசிறி ஜயசேகர அதிலே ஜனாதிபதியை நீக்கும் படிமுறை இருப்பதாகவும், பிரதமர் எதிர்கட்சி தலைவர், சபாநாயகர், இணங்கினால் ஜனாதிபதியை நீக்கலாம் என கூறப்பட்டுள்ளதாகவும், நானும், ஜயம்பதி விக்ரமரட்ண மற்றும் சுரேன் பெர்ணான்டோ ஆகியோர் ஜனாதிபதியை நீக்க சூழ்ச்சி செய்வதாகவும், கள்ளத்தனமாக கொண்டுவந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படும் யோசனையையே 6 பேர் கொண்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது. ஜே.வி.பி நிலைப்பாட்டுக்கு அமைய அது முன்வைக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் இல்லாத ஜனாதிபதி இருக்கும்போது அந்த ஜனாதிபதிக்கு உடல்நல குறைவு, மனநல குறைவு, அல்லது இயங்க முடியாத நிலை உருவானால் அவர் அந்த பதவியில் இருந்து விலகவேண்டும் என கூறப்பட்டுள்ளது. அது இன்றைய அரசியலமைப்பிலும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அதனை தீர்மானிப்பது யார் என கூறப்படவில்லை. ஆகவே அந்த 6 நிபுணர்களும் யார் தீர்மானிப்பது என வெவ்வேறு வழிகளை அல்லது யோசனைகளை கூறியுள்ளார்கள். அது ஒரு யோசனை மட்டும்தான்.

அதுவும் நிறைவேற்று அதிகாரம் இல்லாத ஜனாதிபதி முறை வரும்போது கொண்டுவரும் முறையாகவே உள்ளது. ஆகவே இது நிபுணர்களின் பல யோசனைகளில் ஒன்று. இவற்றை வழிநடத்தல் குழு ஆராயவேண்டும்.

நிறைவேற்று அதிகார முறை முற்றாக ஒழிக்கப்படவேண்டுமா? என தீர்மானிக்கப்பட வேண்டும். ஆகவே ஒரு யோசனையை எடுத்து பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு பூதாகரமான புரளியை கிழப்பி விட்டிருக்கின்றார்.

அதேபோல் நாங்கள் சமஸ்டி முறையிலான ஆட்சியை கொண்டுவர எத்தணிக்கிறோம் என தினேஸ் குணவர்த்தனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். சமஸ்டி குணாம்சங்கள் புதிய அரசியலமைப்பில் இருக்கும். காரணம் அதிகூடிய அதிகாரப்பகிர்வு இருக்கவேண்டும் என இடைக்கால வரைபில் உள்ளது.

ஒற்றையாட்சி முறையாக இது இருக்க முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. ஒற்றையாட்சி இல்லாமல் அதிகூடிய அதிகார பகிர்வுடன் வரும் புதிய அரசியலமைப்பில் சமஸ்டி குணாம்சங்கள் இருப்பது சகஜம். அதனையும் குற்றச்சாட்டாக ஜயம்பதி விக்ரமரட்ணவும் நானும் சமஸ்டி முறையை அறிமுகப்படுத்துகிறோம் என கூறியுள்ளார்கள்.

இதற்கு உரிய விளக்கத்தை நானும், ஜயம்பதி விக்ரமரட்ணவும் நாடாளுமன்றில் கூறினோம். ஆகவே இரு வாரங்களில் சிலவேளை நிபுணர்கள் ஒரு ஆவணத்தை, அல்லது இரு ஆவணத்தை வழிநடத்தல் குழுவிடம் கையளிப்பார்கள்.

அதனை வைத்து வழிநடத்தல் குழு புதிய அரசியலமைப்புக்கான ஒரு வரைபை தயாரித்து அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்க உள்ளது. மேலும் குறித்த 6 பேர் கொண்ட ஆவணம் தயாரிப்பில் நானும், ஜயம்பதி விக்ரமரட்ணவும் பங்கெடுக்கவில்லை. அதில் சூழ்ச்சியும் கிடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment