வர்த்தக தகவல் மையம் நிலைபேறான அபிவிருத்திக்கு வழிவகுக்கும் – ரிஷாத்

236 0

வர்த்தக ரீதியான தகவல்கள் பதிவேற்றப்பட்ட இணையத்தளத்தினூடாக எதிர்காலத்தில் அடைய எதிர்பார்த்துள்ள நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை நோக்கி விரைந்து பயணிக்க முடியும் என கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்தார்.

வர்த்தக ரீதியான தகவல்கள் பதிவேற்றப்பட்ட இணையத்தளத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வர்த்தக ரீதியான உறுதிசெய்யப்பட்ட தகவல்கள் அடங்கிய இணையத்தளம் இலங்கையில் ஆரம்பிக்கப்படுவது வர்த்தக ரீதியாக முக்கியமானதொரு நிகழ்வாகும். இது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு உதவியாக அமையும் என்பதுடன் பூகோளமயமாக்கப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளுக்கு அடிப்படையாகவும் அமையும்.

தகவல்களை திரட்டுவதில் ஏற்படும் தாமதத்தின் காரணமாக ஏற்படும் வர்த்தக முதலீட்டுத்தடைகளை இவ்வாறானதொரு தகவல் தளத்தின் மூலமாக வெற்றிகொள்ள முடியும். அதேபோல் பொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பிலும் கண்டறிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது இலங்கையின் மரக்கறி மற்றும் பழவகைகளின் ஏற்றுமதி மூலம் பெருமளவான வருமானம் பெறப்படுகின்றது. எமது ஏற்றுமதி தொடர்பில் சர்வதேச ரீதியில் கேள்வி ஏற்பட்டுவரும் நிலையில் வரத்தகம்சார் தகவல்கள் அடங்கிய இணையத்தளம் மேலும் பயனுடையதாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் அமையும் என்றார்.

Leave a comment