வட மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக அனந்தி பொலிஸில் முறைப்பாடு

389 0

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினிற்கு எதிராக மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வட மாகாண பெண் அமைச்சர் ஒருவர் இராணுவத்தை விமர்சித்துக் கொண்டு பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கியை வாங்கி வைத்திருப்பதாக கடந்த மாகாண சபை அமர்வின் போது உறுப்பினர் அஸ்மின் தெரிவித்திருந்தார்.

ஆயினும் அஸ்மினுடைய கருத்தை மறுதலித்திருந்த அனந்தி சசிதரன் அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து சில தினங்களிற்கு முன்னர் தன்மீது அவதூறை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட அஸ்மினுக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாகவும் ஊடகங்களிடம் அனந்தி சசிதரன் தெரிவித்திருந்தார்.

இந் நிலையிலையே  தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் அச்சுறுத்தல்,  தன்னை ஒரு ஆயுதப் பிரியராக காண்பிப்பது, தென்னிலங்கை மக்களிடையே தனக்கு எதிரான குரோத மனப்பான்மையை மக்களிடையே ஏற்படுத்துவது போன்ற நிலைமை இருப்பதால் உறுப்பினர் அஸ்மீன் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் ஊடகங்களின் முன்னிலையில் உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென்றும் கோரியே சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டினையடுத்து சம்பவம் தொடர்பில்  உறுப்பினர் அஸ்மினை சாவகச்சேரி பொலிஸார் இன்றைய தினம் விசாரணைக்காக அழைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment