இஸ்ரேல் நாடு, யூத நாடாகி உள்ளது. இதற்கு வழிசெய்யும் சர்ச்சைக்கு உரிய மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கலாகி நிறைவேறியது.
இஸ்ரேல் நாடு, யூத நாடாகி உள்ளது. இதற்கு வழிசெய்யும் சர்ச்சைக்கு உரிய மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கலாகி நிறைவேறியது. இந்த நாட்டின் முழுமையான தலைநகராக ஜெருசலேம் விளங்கும் எனவும் அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மசோதா நிறைவேறி இருப்பதற்கு இஸ்ரேலிய அரபு எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ புகழ்ந்து உள்ளார். இது சிறப்புவாய்ந்த தருணம் என அவர் கூறி உள்ளார்.
8 மணி நேர விவாதத்துக்கு பின்னர் ஓட்டெடுப்பு நடந்தது. 62 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 55 பேர் எதிராக ஓட்டு போட்டனர்.
இஸ்ரேல் மக்கள் தொகையில் (90 லட்சம்) 20 சதவீதத்தினர் இஸ்ரேலிய அரபு மக்கள் ஆவர். இப்போது இஸ்ரேல், யூத நாடு ஆகி விட்டதால் அரபி மொழிக்கான அந்தஸ்து குறைந்து விடும் என சொல்லப்படுகிறது.
சட்டப்படி அவர்கள் சம உரிமை பெற்றிருந்தாலும்கூட இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக குறை கூறுகின்றனர்.அகமது டிபி என்ற அரபு எம்.பி. கருத்து தெரிவிக்கையில், “இந்த மசோதா நிறைவேறி இருப்பது, ஜனநாயகம் செத்து விட்டதையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டார்.