வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க நிலையான திட்டமில்லை – அநுர

247 0

வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவது தொடர்பாக அரசாங்கத்துக்கு நிலையான வேலைத்திட்டங்கள் கிடையாது என்பது அரசாங்கத்தின் கருத்துக்களின் மூலம் தெளிவாகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று 22/7 இன் கீழான நிலையியல் கட்டளை மீது கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்த சரியான திட்டம் ஒன்று அரசாங்கத்திற்கு இல்லை. இதற்கு முன்னர்  1999, 2005, 2012 ஆண்டுகளில் வேலையில்லா பட்டதாரிகள் வேலைகளுக்கு  இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இன்று பட்டதாரிகள் வீதிகளில் இறங்கி போரடிய பின்னரே வேலை வாய்ப்புகளை வழங்கும் நிலைமையே காணப்படுகின்றது. 2012 மார்ச் 31 ஆம் திகதியன்றே இறுதியாக பட்டதாரிகள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால் அதன்பின்னர் இது வரையான காலப்பகுதியில் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறிய பட்டதாரிகள் வேலையில்லாதவர்கள் வரிசையில் இருக்கின்றனர். போரட்டங்களின் பின்னர் 2017 இல் வெளியான அறிவித்தலின் படி 57,000 பேர் வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இவர்களுக்கு இன்றுவரை அரச வேலை வழங்கப்படவில்லை.

வேலையில்லா பட்டதாரிகளின் இணைப்பு குறித்து அரசாங்கம் பல அறிவித்தல்களை விடுத்தது.  வயது எல்லை 35 என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. 2015 டிசம்பர் 31 வரையான காலப்பகுதி வரையே விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 24,000 பேரை சேவையில் இணைத்துக்கொள்வதாக கூறப்பட்டது.  இதில் அரச கட்சிகளின் கட்சி தலைமைகளில் கட்சி ஆதரவானவர்களை அடிப்படையாக கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும் இன்றுவரை அவர்களுக்கு என்ன நடக்குமென தெரியவில்லை. 2015 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னரானவர்களையும் தொழில்வாய்ப்புகளுக்கு இணைத்துக்கொள்வார்களா? சகலருக்கும் அரசாங்கம் வேலை வாய்ப்புகளை வழங்குமா? சகல பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கான தேசிய கொள்கையை அரசாங்கம் தயாரிக்குமா? என கேள்விகளை எழுப்புகின்றேன் என்றார்.

Leave a comment