போக்குவரத்து விதி முறைச்சட்டம் தொடர்பில் அறிமுகம் செய்துள்ள புதிய நடைமுறை இன்று (15) முதல் அமுலுக்கு வருவதாக போக்குவரத்துப் பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி,
போக்குவரத்து விதி முறைகளை மீறியதற்காக அவ்விடத்திலேயே தண்டப் பணத்தைச் செலுத்தலாம்.
வேகக் கட்டுப்பாட்டை மீறுவதற்கான தண்டப் பணம் 1000 ரூபாவிலிருந்து 3 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கின்றது.
ஏனைய 1000 ரூபா தண்டப் பணங்கள் 2 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கின்றது.
நீதிமன்றத்தில் தீர்மானிப்பதற்கு விடப்படும் 10 குற்றங்கள், தண்டப் பணம் அறவிடும் குற்றமாக மாற்றப்பட்டுள்ளது.
அபராதம் செலுத்துவதற்கான காலப் பகுதி 28 நாட்களாக அதிகரிப்பு.
அபராதம் விதிக்கப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்குள் செலுத்தாவிடின் தண்டப் பணம் இரு மடங்காக அதிகரிக்கப்படும் எனவும் போக்குவரத்துப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்கள் (3 நீக்கம், 2 விதி மீறல் ஒன்றாக்கப்பட்டுள்ளது) 19 ஆவதோடு, மேலும் 14 விதி மீறல்கள் அவற்றுடன் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலதிகமாக சேர்க்கப்பட்ட 14 விதிமீறல்களும் அதற்கான (Spot fine) அபராதங்களும்:
- அனுமதிப்பத்திரமின்றி அவசர சேவை அல்லது பொது சேவை வாகனங்களை செலுத்துதல் – ரூ. 1,000
- அனுமதிப்பத்திரமின்றி விசேட செயற்பாட்டு வாகனங்களை செலுத்துதல் – ரூ. 1,000
- அனுமதிப்பத்திரமின்றி இரசாயனப் பொருட்கள் மற்றும் தாக்குதிறன் மிக்க மூலப்பொருட்கள் கொண்ட வாகனங்களை செலுத்துதல் – ரூ. 1,000
- 500 இற்குள் உள்ளடங்கும் வாகனத்தை செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் கொண்ருக்காமை – ரூ. 1,000
- சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டு செல்லாமை – ரூ. 1,000
- ஆலோசக அனுமதிப்பத்திரம் இன்மை – ரூ. 2,000
- புகை உள்ளிட்டவை அதிக வெளிப்படுத்துகை – ரூ. 1,000
- ஆசன பட்டி அணியாமை – ரூ. 1,000
- வாகனத்திலிருந்து அதிக சத்தம் வெளிப்படுத்தல் – ரூ. 1,000
- வீதி சமிக்ஞையை பின்பற்றாமை – ரூ. 1,000
- பஸ்களில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லல் – ரூ. 500
- லொறிகளில் அல்லது முச்சக்கர மோட்டார் வேன்களில், கொள்ளக்கூடிய அதிகூடிய பாரத்திலும் பார்க்க அதிக பொருட்களை ஏற்றிச் செல்லல் – ரூ. 500
- மோட்டார் வாகனம் தொடர்பான உத்தரவை மீறல் – ரூ. 1,000 (கண்ணாடியை மறைத்தல் -Tinted Glass, கையடக்க தொலைபேசி பாவனை உள்ளிட்டவை)
- புகை பரிசோதனை உள்ளிட்ட சான்றிதழ்களை உடன் கொண்டு செல்லாமை – ரூ. 500 போன்ற 14 போக்குவரத்து விதி மீறல்களுடன் மொத்தம் 33 மீறல்களுக்கு இந்த புதிய நடைமுறையின் கீழ் வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. (மு)