வட மாகாண சபையில் உறுப்பினர்களுக்கு இடையில் கடுமையான தர்க்கம்

423 0

பா. டெனீஸ்வரன் தனது அமைச்சர் பதவியை தொடர்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும் எனவும், அவருக்கு அமைச்சருக்கான ஆசனம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் ஆளுங் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கடுமையான தர்க்கம் மூண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வட மாகாண சபையின் 126 வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை சபைக்கு கொண்டு வந்த மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன், மேன்முறையீட்டு நீதிமன்றம் மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிப அமைச்சராக பா. டெனீஸ்வரனே தொடர்ந்தும் இருப்பார் எனவும், அதற்கு எவரும் தடைவிதிக்க கூடாது எனவும் கூறியது.

மேலும், அரசியலமைப்பின் படி இறைமை மக்களுக்குரியது. அந்த இறைமையை மக்கள் நம்பிக்கை பொறுப்பாக எங்களிடம் கொடுத்துள்ளார்கள். ஆகவே நாம் நம்பிக்கை பொறுப்பாளிகள். அந்த வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு பிரகாரம் டெனீஸ்வரன் அமைச்சராக தொடர்வதற்கு இடமளிக்காமை மக்களின் இறைமையை மலினப்படுத்தும் ஒரு செயலாகும். மேலும் மக்களுடைய நம்பிக்கை பொறுப்பாளிகளான நாம் ஆளுநரை சுயாதீனமாக செயற்படுவதற்காக இடமளிக்கப் போகிறோமா?

ஆகவே, இந்த விடயத்திற்கு பரிகாரம் காணாமல் நாம் இந்த சபையில் குந்தியிருப்பதனால் பயன் எதுவும் இருக்காது. அமைச்சர் டெனீஸ்வரன் அமைச்சராக தொடர்ந்து இயங்குவதற்கு இடமளிக்கப்பட்டு அவருக்கு ஆசனம் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் அது நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாரா முகமாக இருப்பதாக அர்த்தப்படும் என்றார்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், அமைச்சர் பா. டெனீஸ்வரனின் பதவி நீக்கம் தொடர்பாக ஆளுநர் வர்த்தமானி பிரசுரம் வெளியிடாமையினால், டெனீஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முதலமைச்சராக நான் எனது கடமையை சரியாக செய்துள்ளேன். வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது எனது கடமையல்ல.

அதே சமயம் 5 அமைச்சர்களுக்கு மேல் பதவி வகிப்பது அரசியலமைப்புக்கு முரணான ஒன்றாகும். அவ்வாறு இருந்தால் அமைச்சர் சபையின் தீர்மானங்கள் சட்ட வலு அற்றவையாக மாறுவதுடன், பாரிய விளைவுகளையும் அது உண்டாக்கும்.

எனவே அரசியலமைப்புக்கு முரணாக நடப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. இவ்வாறான நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்பினை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் தற்போதுள்ள அமைச்சர்கள் எவரையும் பதவி இறக்கம் செய்ய இயலாது.

அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என்றால் அதிகார பகிர்வு என்ன வாயிற்று? ஆளுநருடைய சர்வாதிகாரத்தையா எம்மவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? ஆகவே ஒரு சில நாட்களில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்மானத்தை எடுக்கும் என்றார்.

இதனை தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் கே. சயந்தன் கருத்து தெரிவிக்கையில், ஒரு ஓய்வு பெற்ற நீதியரசராக முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் பதில் வியப்பையும், ஏமாற்றத்தையும் தருகிறது. வழக்கில் யார் வெல்ல வேண்டும்? யார் தோற்க வேண்டும்? என்பது எங்களுடைய பிரச்சினை அல்ல. முன்னாள் அமைச்சர்களை பதவி விலகும்படி முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கேட்டதை போல் அமைச்சர் டெனீஸ்வரனின் அமைச்சு துறைகளை வகிக்கும் அமைச்சர்களான க.சிவநேசன், திருமதி அனந்தி சசிதரன் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் அவற்றை மீளவும் டெனீஸ்வரனிடம் கொடுப்பதுடன் அமைச்சர்கள் இருவரின் ஒருவர் தமது அமைச்சு பொறுப்பை மீள வழங்க வேண்டும்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட சபை உள்ள போது ஆளுநர் சுயமாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட கூடாது. இந்த விடயத்தை இந்த சபை மிக மேலான விடயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அமைச்சர் பா.டெனீஸ்வரனின் செயற்பாடு கட்சி ரீதியானது அல்ல. அவருடைய தனிப்பட்ட செயற்பாடாகும் என கூறினார். இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் கே. சயந்தன் ஆளுநர் மாகாண அமைச்சர்கள் 4 பேரும் யார்? என உறுதிப்படுத்துமாறு முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அதனை மறுத்த முதலமைச்சர் அவ்வாறு எதுவும் தன்னிடம் கேட்கப்படவில்லை என்றார். தொடர்ந்து உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனுக்கு முன் வரிசை ஆசனம் தேவையாக இருந்தால் எனது ஆசனத்தை தருகிறேன். அவருக்கு கொடுங்கள் என கூறினார்.

இதற்கு பதிலளித்த மாகாண சபை உறுப்பினர் கே. சயந்தன் தனிப்பட்ட ஒருவருக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிப்பதாக கூறினார்.

தொடர்ந்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், ஆசனத்திற்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல என கூறினார்.

தொடர்ந்து அவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம் கருத்து தெரிவிக்கையில், இங்கு நடைபெற்ற விடயங்களை நான் நிச்சயமாக ஆளுநருடைய கவனத்திற்கு கொண்டு செல்வேன். மேலும் தானே தொடர்ந்தும் அமைச்சராக இருப்பதாகவும், தனக்கு அமைச்சர்களுக்குரிய ஆசனம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் எனக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனை அடுத்து இந்த விடயம் தொடர்பாக தெளிவுபடுத்தும் படியும், நாம் இருட்டு நிலையில் இருக்கிறோம். என்பதையும் ஆளுநருக்கு கடிதத்தில் எழுதியுள்ளேன். அதற்கான பதில் எமக்கு கிடைக்கவில்லை.

மேலும் உத்தியோக பூர்வமாக இந்த விடயம் தொடர்பில் எமக்கு எதுவும் தெரியப்படுத்தப் படவில்லை. ஆகவே நாம் நீதிமன்ற உத்தரவை மீறுவதாகவோ, மறுதலிப்பதாகவே அர்த்தப்படாது என கூறியதுடன் ஆளுநரின் பதிலை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக கூறி அவையை தேனீர் இடைவேளைக்காக ஒத்திவைத்தார்.

Leave a comment