முட்டை வினியோகத்தில் ஊழல்- சத்துமாவு நிறுவன ஊழியர் தற்கொலை முயற்சி

412 0

சத்துணவு முட்டை கொள்முதலில் முறைகேடு தொடர்பான வருமான வரித்துறையினரின் விசாரணையில் சத்துமாவு நிறுவன ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.

தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு தேவையான முட்டைகளை ஒப்பந்த அடிப்படையிலும், சத்து மாவு, பருப்பு வகைகள் போன்றவற்தை தயாரித்தும் மொத்தமாக வழங்கி வருகிறது.

563 அங்கன் வாடிகள் மூலம் 21 லட்சம் குழந்தைகள், 3 லட்சம் வளரிளம் பெண்கள், 6 லட்சம் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த திட்டம் மூலம் பயன் பெற்று வருகிறார்கள்.

இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக தமிழகம், கர்நாடகா, மும்பை, டெல்லி என நாடு முழுவதம் 76 இடங்களில் கிளைகள் உள்ளன. மேலும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 7 மாநிலங்களுக்கு இந்த நிறுவனம் அரசுக்கு சத்துமாவு சப்ளை செய்து வருகிறது.

இந்த நிறுவனம் கிளை நிறுவனங்களிடம் உணவு பொருட்கள் வாங்கியதாக பல கிளை நிறுவனங்களை போலியாக உருவாக்கி அதன் மூலம் பல கோடி ரூபாய் கணக்கு காட்டி மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சத்துணவு முட்டை வழங்கும் ஒப்பந்தத்தை பெற்ற போது பண்ணை இல்லாத நிலையில் அதன் கூட்டமைப்பில் இல்லாத இந்த நிறுவனத்திற்கு எப்படி ஒப்பந்தம் கிடைத்தது என்பது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது.

நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு பருப்பு வினியோக ஒப்பந்தத்தில் கிறிஸ்டி மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மட்டுமே போட்டியிட்டன. அப்போது சந்தை விலையை விட அதிகமாக பருப்பு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. டெண்டரில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது கிறிஸ்டிக்கு டெண்டரை விட வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகாரிகள் துணையுடன் சில விதிமீறல்களும் நடந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு பல்வேறு நிறுவனங்களை தொடங்கி சத்துணவுக்கு பருப்பு, சத்துமாவு, முட்டை வினியோகம் செய்து வருகிறது.

இந்த நிறுவனம் தினமும் 1300 மெட்ரிக் டன் சத்துமாவு தயாரித்து செய்து வருகிறது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஒப்பந்தத்தை எளிதாக பெற்று வந்தனர். பண மதிப்பிழப்பிற்கு பிறகு திருச்செங்கோட்டில் ஒரு வங்கியில் கோடிக்கணக்கான பழைய 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றதாக புகார் எழுந்தது.

முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் ஏற்கனவே சிதம்பரம் குடும்பத்திடம் இருந்து ரூ.46 கோடிக்கு சொத்து வாங்கியது தொடர்பாக சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்கும் படி கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தினர். விசாரணையில் சரியாக பதில் அளிக்காததால் சிதம்பரம் குடும்பத்தினரிடம் இருந்து நிலம் வாங்கிய அக்னி பில்டர்ஸ் மற்றும் அவர்களிடம் இருந்து நிலத்தை வாங்கிய கிறிஸ்டி புட்ஸ் நிறுவனங்கள் குறித்து வருமான வரித்துறையினர் விசாரணையில் இறங்கினர்.

அப்போது கிறிஸ்டி புட்ஸ் உரிமையாளர் குமாரசாமி தினமும் பல மணி நேரம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதா தேவியிடம் பேசி வந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 5-ந் தேதி அதிகாலை முதல் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் உள்பட நாடு முழுவதும் 72 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.

அப்போது போலி நிறுவனங்களுக்கான ஆவணங்களும், அதற்காக யார், யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான ஆவணங்களும் வருமான வரித்துறையினரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் சத்துமாவு மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுதாதேவியின் சென்னை நெற்குன்றத்தில் உள்ள வீடு, அலுவலகம் மற்றும் அதிகாரிகள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் சத்து மாவு மற்றும் முட்டை கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட பல கோடி ரூபாய் சட்டத்திற்கு புறம்பாக வங்கி கணக்குகளில் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன.
திருச்செங்கோடு ஆண்டிப்பாளையத்தில் சோதனை நடந்து வரும் சத்துமாவு நிறுவனத்தை படத்தில் காணலாம்.

நாடு முழுவதும் நடந்த சோதனையில் மொத்தம் ரூ.7 கோடி ரொக்கப்பணம், பல லட்சம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல கோடி ரூபாய் வெளி நாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியிடம் ரகசிய இடத்தில் வைத்து 2-வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூர் மற்றும் சென்னை அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

அடுத்தக்கட்டமாக இன்று குமாரசாமியை திருச்செங்கோடுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை காண்பித்து அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது. இதில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இதற்கிடையே வரி ஏய்ப்புக்காக தொழில் அதிபர் குமாரசாமி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் மறுத்தனர்.

பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி, அதில் குற்றச்சாட்டுகள் உறுதியானால்தான் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. தற்போது குமாரசாமி விசாரணை வளையத்துக்குள் மட்டுமே உள்ளார்.

இதற்கிடையே கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தின் மேனேஜர் வீட்டின் கழிவறையில் இருந்து ஒரு சாவி கைப்பற்றப்பட்டது. அந்த சாவி மூலம் அங்குள்ள ஒரு வீட்டை திறந்து பார்த்த போது ஏராளமான இரும்பு பெட்டியில் ஆவணங்கள் இருந்துள்ளது. அந்த ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

திருச்செங்கோடு ஆண்டி பாளையத்தில் உள்ள கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவனத்தின் காசாளரான கார்த்திக்கேயன் என்பவரை வருமான வரித்துறையினர் பிடித்து நிறுவனத்தின் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணைக்கு ஒத்துழைக்காத அவர் திடீரென தனக்கு மயக்கம் வருவதாகவும், தண்ணீர் குடித்து விட்டு வருவதாக கூறி சென்றார்.

பின்னர் வீட்டின் முதல் மாடிக்கு வேகமாக சென்ற அவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் அங்கிருந்து கீழே குதித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வருமான வரித்துறையினர் அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு முதுகு தண்டு வடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வருமான வரித்துறையினர் திருச்செங்கோடு புறநகர் போலீசில் கார்த்திக்கேயன் மீது புகார் கொடுத்தனர். அதில் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தற்கொலைக்கு முயன்றதாக புகார் கூறி உள்ளனர்.

இதையடுத்து கார்த்திக்கேயன் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்க அவர் தற்கொலை நாடகம் ஆடியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

3-வது நாளாக இன்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்டி புட்ஸ் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a comment