வடக்கு– கிழக்கு மாகாணத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள 40ஆயிரம் வீடுகளுக்குரிய ஒப்பந்தத்தை சீன நிறுவ னத்துக்கு வழங்க வேண்டாம். அந்த ஒப்பந்தத்தை இந்தியாவுக்கு வழங்குங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டமைப்பின் கோரிக்கையை சாதகமாக ஆராய்வதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், யாழ்.மாநகர சபை முதல்வர் இ.ஆனோல்ட், வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரும், உள்நாட்டலுவல்கள் அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, வனஜீவராசிகள் அமைச்சு ஆகியவற்றின் செயலர்களும், முப்படையினரும், வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாவட்டங்களின் செயலர்களும் வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வடக்கு, கிழக்கில் வீடுகளை அமைக்கும் பணி சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டமை குறித்து இந்தியா கவலை வெளியிட்டிருந்தது. இந்த ஒப்பந்தம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது சரியே என்று அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில், இந்த விடயம் பிரதமரின் கவனத்துக்கு இந்தக் கூட்டத்தில் கொண்டு செல்லப்பட்டது.
சீனாவுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை இல்லாமல் செய்து, 12 லட்சம் ரூபா பெறுமதியில் இந்த வீடுகளை அமைத்துத்தர இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்படவேண்டும். இந்திய அரசு கோரிக்கையை ஏற்றுக் கொண்டால், அவர்கள் ஊடாக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் பிரதமர் ரணிலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பில உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அமைச்சரவைக்கு மீண்டும் அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என்று அறியமுடிகின்றது

