‘வெற்று மிரட்டல்களுக்கு அஞ்சி நடுங்கும் இயக்கம் தி.மு.க. அல்ல’ கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் பதில்

355 0
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக கவர்னர் பன்வரிலால் புரோகித் விளக்கம் என்ற பெயரில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க.வுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில், தனது மக்கள் தொடர்பு இணை இயக்குநர் மூலமாகச் செய்தி ஒன்றை வெளியிட்டு, அரசியல் சட்டத்திற்கு அப்பால் அல்லது அரசியல் சட்டத்திற்கு முரணாக, நேரடி அரசியல் செய்ய முயன்றிருப்பதற்கு தி.மு.க.வின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்திட மாவட்டங்களுக்குச் செல்லவில்லை என்றும், ஏதோ தி.மு.க.வின் சார்பில் தான் அவ்வாறு சொல்லப்படுகிறது என்றும் கவர்னர் சார்பில் விளக்கம் தரப்பட்டிருக்கிறது. ஒரு மாவட்டத்திற்குச் சென்று அங்கே கலெக்டர், மாவட்ட காவல்துறை அதிகாரிகள், மற்ற துறை அதிகாரிகள் ஆகியோரை எல்லாம் அழைத்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துகொண்டு அவர்களுடைய செயல்பாடுகளைப் பற்றியெல்லாம் விவாதிப்பதற்குப் பெயர் ஆய்வு என்பதல்லாமல், வேறு என்ன என்பதற்கு கவர்னர் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், விளக்கமோ விவரமோ ஏதுமில்லை.
தி.மு.க.வை பொறுத்தவரை கவர்னர் கலந்து கொள்ளச் செல்லும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலோ, வேந்தர் என்ற முறையில் கலந்து கொள்ளும் பல்கலைக்கழகங்களின் நிகழ்ச்சிகளிலோ கருப்புக் கொடி காட்டவில்லை. ஏன் அலுவலகப் பணியை முன்னிட்டு டெல்லிக்குச் செல்லும்போது விமானநிலையத்தில் கருப்புக் கொடி காட்டவில்லை.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமையிலும், கடமையிலும், அதிகாரத்திலும், அரசியல் சட்டத்தின் வரையறைகளுக்கும், மரபுகளுக்கும் மாறாக தலையிட்டு, மாவட்ட அளவில் அரசு அதிகாரிகளை கூட்டி நடத்தும் ஆய்வுக்குத் தான் தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கிறது. எதிர்ப்பின் அடையாளமாக, அனுமதிக்கப்பட்ட வழக்கத்தின் அடிப்படையில், கருப்புக் கொடியும் காட்டுகிறது.
“கூட்டாட்சித் தத்துவம்” என்பது அரசியல் சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் அருட்கொடை. அதில் குறுக்கிட்டு, இல்லாத அதிகாரத்தை இருப்பதாக கற்பனை செய்து, தனக்கென ஓர் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இரண்டாம் தரத்திற்குத் தள்ளிச் சிறுமைப்படுத்துவதன் மூலமாக ஜனநாயக நெறிகள் இழிவுபடுத்தப்படுவதை, மாநில சுயாட்சிக்காகவும், மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும் நீண்ட காலமாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தி.மு.க. ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. எதிர்த்துப் போராடாமல் விலகியும் ஓடாது என்பதை கவர்னர் உணர வேண்டும்.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124 பற்றி குறிப்பிட்டு 7 வருட சிறை தண்டனை பற்றியெல்லாம் கவர்னர் சார்பில் குறிப்பிட்டு, தி.மு.க.வை மிரட்டிப் பார்க்க முயற்சி செய்திருக்கிறார்கள்.
நான் சுட்டிக்காட்ட விரும்புவதெல்லாம், கவர்னர் அரசியல் சட்டத்தின் 163-வது பிரிவையும், அந்த பிரிவின் கீழ் வெளிவந்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் படித்துப் பார்த்தாலே தி.மு.க.வின் எதிர்ப்பு எந்த அளவுக்கு நியாயமானது, சட்டத்திற்குட்பட்டது என்று நன்கு தெரியும். ஏனென்றால் அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள விருப்ப அதிகாரங்கள் தவிர, அனைத்து விஷயங்களிலும் மாநில அமைச்சரவையின் அறிவுரையின்படிதான், கவர்னர் நடக்க வேண்டும்.
இது அரசியல் சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட கவர்னர் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மட்டுமல்ல கடமையும் ஆகும்.
பா.ஜ.க. அரசு நடைபெறும் மாநிலங்களில் ஏன் வலுவான தலைமை உள்ள எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட, கவர்னர்கள் இந்த அரசியல் சட்ட கடமையிலிருந்து விலகவில்லை.
மத்திய பிரதேசத்திலோ, மேற்கு வங்கத்திலோ கவர்னர்கள் மாவட்ட ஆய்வுகளை நடத்துவதில்லை. ஏன் தமிழகத்திலேயே கூட இதுவரை இருந்த கவர்னர்கள் இப்படிப்பட்ட ஆய்வுகளை நடத்தியதில்லை. ஆனால் இல்லாத அதிகாரத்தை தனக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டு, கவர்னர் சார்பில் அறிக்கை விடுத்திருப்பது, அரசியல் சட்டத்திற்குப் பொருத்தமற்றது மட்டுமல்ல, கூட்டாட்சி தத்துவத்திற்கே ஆபத்தானது.
தலைமைச் செயலகத்தில் ஓர் அரசாங்கம், ராஜ்பவனில் ஓர் அரசாங்கம் நடத்தி, இரட்டை அரசாங்கம் நடத்துவதற்கு நிச்சயம் அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் அதிகாரம் அளிக்கவில்லை என்பதை கவர்னர் அறிந்திருப்பார் என்று பெரிதும் நம்புகிறேன்.
தி.மு.க.வைப் பொறுத்தவரை, கவர்னர் பதவி தேவையற்ற ஒன்று என்ற நிலைப்பாடு உடையது எனினும், அரசியல் சட்டத்தில் கவர்னர் பதவி இருக்கும் வரை அந்தப் பதவியின் மாண்புகளை மதித்து நடக்கும்.
அதே நேரத்தில் அப்பதவியில் இருப்பவர்கள் அரசியல் சட்டத்தின் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு மாறாகச் செயல்பட நினைக்கும் போது, தி.மு.க. பொறுத்துக் கொள்ளாது. ஆகவே, இந்த கருப்புக் கொடி போராட்டத்திற்குக் காரணம் ஆளுநரின் எல்லைமீறிய அதிகார வேட்கைதானே தவிர, நிச்சயமாக தி.மு.க. அல்ல.
தற்போதைய கவர்னர் மத்திய பா.ஜ.க. அரசின் பிரதிநிதியாக இருப்பதால், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் செய்ய வேண்டிய அரசியல் பணிகளை செய்து அரசியல் ரீதியாக உதவிட விரும்புகிறார் என்றே தமிழக மக்கள் கருதுகிறார்கள். ஆகவே, தி.மு.க.வின் போராட்டம், அரசியல் சட்டத்தைப் போற்றிக் காப்பாற்ற நடப்பது.
இறுதியாக ஆய்வு தொடரும் என்று கவர்னர் அறிவித்துள்ளார். இதற்கு இங்குள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவர் தலைமை யில் உள்ள அ.தி.மு.க. அரசும் எதிர்ப்புத் தெரிவிக்க துணிச்சல் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் தி.மு.க. வெற்று மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி நடுங்கும் இயக்கம் அல்ல. ஆகவே, கவர்னரின் அரசியல் சட்டத்திற்கு எதிரான ஆய்வு தொடரும் என்றால், அரசியல் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவத்தையும், தி.மு.க.வின் கொள்கையான மாநில சுயாட்சியையும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமைகளையும் பாதுகாக்க, தி.மு.க.வின் போராட்டக் கொடி தொடர்ந்து தீர முகம் காட்டி உயர்ந்து கொண்டே இருக்கும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a comment