முன்னாள் போராளிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரும் விடயம், மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்று என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகளுக்கு இழப்பீட்டை வழங்கக்கோரி அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் முன்வைக்கப்பட்ட யோசனை அமைச்சரவையில் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதுதொடர்பில் கருத்துரைத்துள்ள முஜுபுர் ரஹ்மான், முன்னாள் போராளிகளும் நாட்டின் பிரஜைகளே என்றும், அவர்களுக்கு சாதாரண வாழ்க்கையை கொண்டு செல்வதற்கான உரிமை இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தைப் பயன்படுத்தி சிலர் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.