ஹட்டன், வனராஜா தோட்டப்பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் – மக்கள் பீதியில்

238 0

ஹட்டன் டிக்கோயா வனராஜா கீழ்பிரிவு தோட்டப்பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டத்தின் காரணமாக தேயிலைமலையில் தொழில் செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு மேலாக சிறுத்தைகள் இத்தோட்டத்தில் உள்ள தேயிலை செடி அடிவாரத்திலும், டிக்கோயா வனராஜா தமிழ் வித்தியாலயத்தின் வளாகப்பகுதியிலும் பதுங்கி இருப்பதுடன் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு அண்மையில் உள்ள காட்டுப்பகுதியில் இருப்பதாகவும், இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தோட்டத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதுடன் லயன் குடியிருப்பு பகுதிகளுக்கும் இவை வந்து சென்றுள்ளதாகவும், காவலுக்காக வளர்க்கப்படுகின்ற நாய்களையும் இச் சிறுத்தைகள் வேட்டையாடி உண்பதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், குறித்த பாடசாலை வளாகப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை அவதானித்த அதிபர், ஹட்டன் பொலிஸாருக்கும், நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கும் பலமுறை அறிவித்துள்ளார். எனினும் இதுவரை எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

எனினும், இந்த ஒருவார காலமாக பாடசாலை வளாகத்தினுள் சிறுத்தையின் நடமாட்டம் அதிகமாக இருந்ததை அவதானித்த மாணவர்களின் பெற்றோர்கள் வனவிலங்கு அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து, இப்பகுதிக்கு வருகை தந்த வனவிலங்கு அதிகாரிகள் சிறுத்தைகள் இருக்கும் பகுதியை அவதானித்ததுடன் சிறுத்தைகளை விரட்டுவதற்காக வெடிகள் கொளுத்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும், சிறுத்தைகள் வந்தால் விரட்டுவதற்கு சில வெடிகளை மக்களிடமும் கையளித்து சென்றுள்ளனர்.

தேயிலை மலை பாதையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படும் அதேவேளை தேயிலை மலைகள் காடுகளாக மாறிவருவதை அடுத்தே சிறுத்தைகள் மக்கள் வாழும் பிரதேசத்தை நோக்கி வருகை தருவதாகவும் பொதுமக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

எனவே பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a comment