யுத்தத்தில் உயிரிழந்தோர் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு-ராஜித

279 0

நாடு முழுவதும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி யுத்தத்தால் உயிரிழந்தோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டோருக்கும் நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார். மேலும் இது பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களைத் தவிர்த்து வடக்கு, கிழக்கில் மட்டுமன்றி புலிப் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாட்டின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு,வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் இது தொடர்பில் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டிருந்த பத்திரத்தில் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு நட்டஈடு எனும் பகுதி நீக்கப்பட்டதன் பின்னரே அமைச்சரவை அதற்கான அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர், காணாமற்போனோர் சொத்துக்களை இழந்தோர் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டோர் ஆகியோருக்கு நட்டஈடு வழங்குமாறு அமைச்சர் சுவாமிநாதன் கோரிக்கை விடுத்திருந்தார். இதில் இறுதியாக குறிப்பிடப்பட்டுள்ளதன்படி பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கினால் அது பயங்கரவாதத்தை ஏற்றுக் கொள்வதாக பொருள்படுமெனக்கூறி ஜனாதிபதி அதனை ஏற்க மறுத்தார். எனினும் அந்த கோரிக்கையை மட்டும் நீக்கிவிட்டு பாதிக்கப்பட்ட ஏனைய அப்பாவி மக்களுக்கு விரைவில் நட்டஈடு வழங்க வேண்டுமென்ற யோசனையை நான் தான் முன்வைத்திருந்தேன்” என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 12 ஆயிரம் பேருக்கு கடந்த அரசாங்கம் புனர்வாழ்வளித்து வேலைவாய்ப்புகளை வழங்கியிருந்தது. அதனடிப்படையில் இவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது தொடர்பிலும் பின்னர் யோசிக்கப்படும். அதுவரை ஏனைய மக்களுக்கு நட்டஈடு வழங்குவதனை தாமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நட்டஈடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டில் பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் இடம்பெற்ற கலவரத்தின்போது பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a comment